பாரீஸ் தாக்குதல்காரர்களுக்கு ரூ.51 கோடி பரிசு: பிஎஸ்பி தலைவர் மீது கேஸ் போடலாமா, வேண்டாமா?
லக்னோ: பகுஜன் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஹாஜி யாகூப் குரேஷி சார்லி ஹெப்டோ அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு ரூ.51 கோடி பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தியாவில் அல் கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்கு ஆதரவளிப்போரை தடுத்து நிறுத்த முயற்சி செய்து வரும் வேளையில் குரேஷியின் அறிவிப்பு பொறுப்பில்லாமல் இருப்பததாக உள்ளது என்று தேசிய புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
சார்லி ஹெப்டோ அலுவலகத்திற்குள் புகுந்த 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பிரபல கார்டூனிஸ்டுகள் உள்பட 12 பேர் பலியாகினர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பவர்களுக்கு ரூ.51 கோடி பரிசு அளிக்கப்படும் என்று குரேஷி அறிவித்துள்ளார்.
முன்னதாக அவர் டென்மார்க் நாளிதழில் நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து கார்டூன் வரைந்தவரின் தலையை கொண்டு வந்தால் ரூ.51 கோடி பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்தபோது அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அவருடைய தற்போதைய அறிவிப்பு பற்றி ஆய்வு செய்து வருவதாக உத்தர பிரதேச மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
குரேஷியின் அறிவிப்பு குறித்து ஆய்வு செய்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் டிஜிபி முகுல் கோயல் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுத் துறை
அல் கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளின் ஆதரவாளர்களை எதிர்த்து போராடுவது புலனாய்வுத் துறைக்கு எளிது அல்ல. அந்த 2 அமைப்புகளின் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை புலனாய்வுத் துறை வெகுவாக குறைத்துள்ளது.
இந்நிலையில் ஒரு அரசியல் தலைவர் இவ்வாறு அறிவித்துள்ளது பிரச்சனையை ஏற்படுத்தலாம். அவர் மீது 2006ம் ஆண்டிலேயே போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது அவர் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்க மாட்டார் என புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குரேஷி
இது குறித்து கேட்க குரேஷியை பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அவர் பிசியாக இருப்பதாகவும், கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பரிசு அறிவிப்பு
நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து டென்மார்க் நாளிதழில் கார்டூன் வரைந்தவரின் தலையை வெட்டி எடுத்து வருபவருக்கு ரூ.51 கோடி பரிசு அளிக்கப்படும் என்று கடந்த 2006ம் ஆண்டில் குரேஷி அறிவித்தார். அப்போதும் அவரது அறிவிப்பு குறித்து ஆய்வு செய்வதாக அறிவித்த உத்தர பிரதேச போலீசார் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில தலைவர்கள் குரேஷிக்கு ஆதரவு தெரிவித்து பரிசுத் தொகைக்காக நிதி திரட்ட வேண்டும் என தெரிவித்தனர்.
2012ம் ஆண்டில் குரேஷியின் கார்கள் நிறுத்தப்பட்டபோது அவர் சஹான் சிங் பால்யான் என்ற கான்ஸ்டபிளை அறைந்து அவரது சீருடையை கிழித்தார். இந்த சம்பம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதோடு சரி அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கான்ஸ்டபிள் குரேஷி மீது புகார் கூட அளித்தார். ஆனால் குரேஷியோ கான்ஸ்டபிள் தான் குடிபோதையில் தன்னிடம் தவறாக நடந்ததாக தெரிவித்தார்.
வழக்கு போடலாமா, வேண்டாமா?
குரேஷியின் அறிவிப்பு சமுதாய நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளதால் அவர் மீது தீவிரவாத குற்றம் சுமத்தி கடும் நடவடிக்கை எடுக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குரேஷி அதிகாரம் படைத்தவர் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர் போலீசார். அவரை கைது செய்தால் அது மத பிரச்சனையாகி அவர் மீது அனுதாபம் ஏற்படலாம் என போலீசார் நினைக்கிறார்கள். வாக்கு வங்கியை குறி வைத்து வெளியிடப்படும் இது போன்ற அறிவிப்புகளை சில நேரங்களில் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் நல்லது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.