ராஜஸ்தானில் கொடூரம்: 6 வயது சிறுமியை திருமணம் செய்த 35 வயது 'கவுன்சிலர்'
ஜெய்பூர்: ராஜஸ்தானில் 35 வயது நபர் ஒருவர் 6 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட கொடுமை நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிட்டோகர் மாவட்டத்தில் உள்ள கங்கரார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரதன் ஜாட்(35). பஞ்சாயத்து போர்டு உறுப்பினர். அவருக்கும், 6 வயது சிறுமிக்கும் இந்த வார துவக்கத்தில் பந்தோலி அல்லது சோனியானா கிராமத்தில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் நடந்த உடன் இருவீட்டாரும் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை வாட்ஸ்ஆப்பில் பரவியது. அதன் மூலம் தான் குழந்தை திருமணம் நடைபெற்றது அனைவருக்கும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் ரதன் ஜாட் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கங்கரார் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். ரதன் ஜாட்டின் திருமணத்தை ரத்து செய்ய நாளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் வேத் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
திருமணம் பற்றி கிராமத்தாரிடம் கேட்டால் யாரும் எந்த தகவலையும் தெரிவிக்க மறுக்கிறார்கள் என்று பிரகாஷ் மேலும் தெரிவித்துள்ளார்.