மும்பையில் கிரிக்கெட் விளையாடிய சிறுவனின் தலையில் பாய்ந்த அம்பு
மும்பை: மும்பையில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவனின் தலையில் அம்பு பாய்ந்து அவரது மூளையை கிழித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ப்ரிஜேஷ்(16). அவர் கடந்த வெள்ளிக்கிழமை மும்பை தஹிசார் பகுதியில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார்.
அப்போது அதே மைதானத்தில் சில வீரர்கள் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். வீரர்கள் வீசிய அம்பு ப்ரிஜேஷின் தலையில் பாய்ந்து அவரது மூளையை கிழித்தது. இதையடுத்து சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்னர்.
சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கூறுகையில்,
இது மிகவும் ஆபத்தானது. அம்பு சிறுவனின் தலையில் மிகவும் ஆழமாக பாய்ந்துள்ளது. அவரது மூளைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அம்பை வெளியே எடுப்பது மிகவும் கடினம். அவருக்கு பேசும், கேட்கும் திறன் போகலாம் இல்லை அவரால் நடக்க முடியாமல் போகலாம் என்றார்.