கட்டாயப்படுத்தி ஒரே ஸ்டெச்சரில் ஆண்-பெண்..மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துமனையில் கொடுமை
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் பற்றாக்குறை காரணமாக ஒரே ஸட்ரெச்சரில் ஆண் மற்றும் பெண் ஆகியோர் கட்டாயப்படுத்தி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்தில் சிறந்த விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில் மோசமான இடத்தை பிடித்துள்ள பெரிய மாநிலங்களில் ஒன்று மத்திய பிரதேசம். உத்தரப்பிரதேசம், பீகாரை போல் மத்திய பிரதேசத்தில் சுகாதார நிலை மோசமாக இருப்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் இந்தூரில் உள்ளது மகாராஜா யஸ்வந்துரா மருத்துவமனை. இது தான் மத்திய பிரதேசமாநிலத்தில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் சங்கீதா என்ற பெண்மணி இடது கால் உடைந்த காரணத்தால் கடந்த 12 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.
பொதுமக்கள் அதிர்ச்சி
சங்கீதாவுக்கு எக்ஸ்ரே எடுப்பதற்காக ஸ்டெச்சரில் ஏற்றப்பட்டார். அவருடன் ஒரு வயதான ஆணும் அதே ஸ்ட்ரெச்சரில் ஏற்றப்பட்டார். இருவரும் ஒரே ஸ்டெச்சரில் மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி இருக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதனை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.
விசாரணைக்கு உத்தரவு
இதனால் இந்தூர் அரசு மருத்துவமனை சூப்பரண்டன்ட் டாக்டர் பிஎஸ் தாகூர் விசாரணைக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக பணியில் இருந்த மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் வார்ட் பாய்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனிடையே டாக்டர் தாகூர் கூறுகையில், மருத்துவமனையில் ஸ்டெர்ச்சர்கள் பற்றாகுறை இருப்பதையும், மருத்துவமனையில் பல்வேறு வசதிகளில் பற்றாக்குறை இருப்பதையும் ஒப்புக்கொண்டார்.
ஒரே பெட்டில் சிகிச்சை
இதனிடையே சங்கீதாவின் கணவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் எனது மனைவி சிகிச்சைக்காக ஆர்த்தோபெடிக் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில சிகிச்சைக்காக ஒரே ஸ்ட்ரெச்சர் என் மனைவியை ஆண் நோயாளியுடன் ஏற்றிச் சென்றனர். எங்களால் அவர்களின் உதவிக்கு ஒன்றும் செய்ய இயலாது என்பதால் ஒரே ஸ்டெச்சரில் மட்டுமே ஒரே பெட்டில் சிகிச்சை அளிப்பதை கூட ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறோம் என வேதனை தெரிவித்தார்.
நிறைவான சுகாதாரம்
இன்னும் நிறைவான சுகாதாரம் என்பது மத்திய பிரதேசம், பீகார் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் எட்டாத உயரத்தில் இருக்கின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. மருத்துவம் என்பது தமிழகம் மற்றும் கேரளாவைப்போல் வட மாநிலங்களில் ஏழைகளுக்கு தரமாக கிடைக்கவில்லை என்பது வேதனையான உண்மை.