கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் கலாபவன் மணி கொலை- குற்றம்சாட்டும் சகோதரர்
திருவனந்தபுரம்: கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் என் அண்ணனை, அவருடைய நண்பர்கள் கொலை செய்து விட்டனர் என்று நடிகர் கலாபவன் மணியின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் கலாபவன் மணி கடந்த மார்ச் 6ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. சாலக்குடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது உடலில் பூச்சி கொல்லி , எத்தனால், மெத்தனால் வேதிபொருள் இருந்தது.
கலாபவன் மணியின் மரணம் இயற்கையானதல்ல என்று மருத்துவ பரிசோதனை சந்தேகத்திற்கிடமின்றி உறுதி செய்துள்ளது. ஆனால், மணியின் மரணத்துக்கு யார் காரணம் என்ற கேள்வி இன்னும் பதிலளிக்கப்படாமலே உள்ளது.
இந்நிலையில், மணியின் நெருக்கமான சினிமா நண்பர்கள் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன். கலாபவன் மணி தனது சினிமா நண்பர்கள் பலருக்கு கடன் தந்து உதவியிருக்கிறார். சொத்து ஒன்றை வாங்க வேண்டி வந்தபோது, அந்த கடன்களை கலாபவன் மணி திருப்பி கேட்டுள்ளார்.
கலாபவன் மணி கடனை திருப்பி கேட்க மாட்டார் என்று நினைத்திருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்துள்ளது. அவர்கள்தான் மணி இனி நடிக்க மாட்டார் என வதந்தி கிளப்பினர். இப்போது அவர்களே மணியின் மரணத்துக்கும் காரணம் எனவும் ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.