சுற்றுச் சூழல் வரி ரூ 787 கோடியை செலவு செய்யாமல் வைத்திருக்கும் டெல்லி அரசு!
வசூலிக்கப்பட்ட சுற்றுச்சூழல் வரி குறித்து அதிர்ச்சி தரும் விதமாக டெல்லி அரசு பதிலளித்துள்ளது.
டெல்லி : தலைநகர் டெல்லி சுற்றுச்சூழல் மாசுபாட்டால் அவதிப்பட்டு வரும் நிலையில், சுற்றுச்சூழல் வரி என்கிற பெயரில் வசூலிக்கப்பட்ட பல கோடி ரூபாய் செலவழிக்காமல் மாநில அரசு வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசுபாடு அதிகரித்து உள்ளது. மக்கள் சுவாசிப்பதற்கே மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனடி நடவடிக்கை எடுத்து மாசுபாட்டைக் குறையுங்கள் என்று பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தி இருக்கிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை, கார்கள் பயன்பாட்டைக் குறைப்பது என மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி சஞ்சீவ் ஜெயின் என்பவர், டெல்லி அரசு வசூலிக்கும் சுற்றுச்சூழல் வரி குறித்து கேள்விகள் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த டெல்லி அரசு, 2015ம் ஆண்டு 50 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும், 2017ம் ஆண்டு வரை ரூ 787 கோடியும் வசூலிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
செலவிடப்படாத வரிப்பணம்
எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டு இருக்கிறது என்கிற கேள்விக்கு அதிர்ச்சி தரும் வகையில் பதிலளித்திருகிறது டெல்லி அரசு. அதற்கு 93 லட்சம் ரூபாய் மட்டும் தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட தொகையில் எவ்வளவு செலவிடப்பட்டது என்பது குறித்து கணக்கு இல்லை என்றும் தெரிவித்து உள்ளது.
பொதுமக்கள் அதிருப்தி
டெல்லி மாசுபாட்டால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கும் சூழலில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, சுற்றுச்சூழல் வரியாக வசூலிக்கப்பட்ட ரூ 787 கோடி நிதியைக் கூட செலவழிக்காமல் வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூழலைப் பாதுகாக்க இந்த நிதியை செலவிட்டிருக்கலாம் என்று எதிர்க்கட்சியினரும், பொதுமக்களின் பிரதிநிதிகளும் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.
நீதிமன்றம் கேள்வி
காற்று மாசுபாடு குறித்த வழக்கு ஒன்றில், போக்குவரத்தால் வெளிப்படும் நச்சு தான் மாசுபாட்டிற்கு முக்கிய காரணம். பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பல வருடங்களுக்கு முன்பே உத்தரவிட்டும் இன்னும் அரசு அதை செயல்படுத்தவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கெஜ்ரிவால் வேண்டுகோள்
காற்று மாசுபாட்டைக் குறைக்க டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டாரோடு நேற்று கலந்து ஆலோசித்தார். அப்போது பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாய கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் மாசு தான் பனியோடு சேர்ந்து புகைப்படலமாக டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. அதைக் குறைக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.