2,000 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்து 2 பேர் பலி... வைரலான அதிர்ச்சி வீடியோ
மஹாராஷ்டிராவில் உள்ள 2,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து 2 இளைஞர்கள் பலியான அதிர்ச்சிகர சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மும்பை: மஹாராஷ்டிர மாநில சிந்து துர்க் மாவட்ட அம்போலி மலையின் 2,000 அடி உயரப் பள்ளத்தாக்கில் விழுந்த 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சிகர வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து சாவந்தவாடி போலீஸ் நிலைய அதிகாரி சுனில் தான்வடே கூறுகையில், " அம்போலி மலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்வார்கள்.
இந்த நிலையில், கடந்த 1ம் தேதி கோல்காபூர் பண்ணை ஒன்றில் வேலை செய்யும் 7 இளைஞர்கள் ஒரு குழுவாக அம்போலி மலைக்கு வந்துள்ளனர். அவர்களில் இம்ரான் கராதி, பிரதாப் ரத்தோட் இருவரும் மது அருந்தினர்.
பின்னர் அங்குள்ள 2,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கின் உச்சியில் நின்று பேசி, விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர், பிடி நழுவி பள்ளத்தாக்கில் விழுந்து இறந்தனர். அவர்களின் உடல்கள் இன்னமும் கிடைக்கவில்லை. தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன." என்று தெரிவித்தார்.
இளைஞர்கள் பள்ளத்தாக்கில் விழுந்த அதிர்ச்சிகர வீடியோ, யூ டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.