நான் வாழ விரும்பவில்லை என்று கூறியபடி பீகார் முதல்வர் மீது “ஷூ” வீசிய இளைஞர் கைது!
பாட்னா: பீகாரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஜிதன் மாஞ்சி மீது இளைஞர் ஒருவர் ஷூ வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சியின் தலைமையில் வாரம்தோறும் ஜனதா தர்பார் என்ற பெயரில் நடைபெறும் முதல்வருடன் மக்கள் உரையாடி கோரிக்கைகளை தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
அப்போது மக்களிடம் புகார்களை பெற்றுக்கொண்டிருந்த மாஞ்சி மீது இளைஞர் ஒருவர் ஷூ ஒன்றினை வீச முயற்சித்தார். அவர் வீசிய ஷூ மாஞ்சி அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே விழுந்தது. இதனால் கூட்டத்தில் சிறிது பதற்றம் ஏற்பட்டது.
ஷூ வீசிய இளைஞர், "என்னை கொன்று விடுங்கள். நான் வாழ விரும்பவில்லை. ஜனதா தர்பாரால் எந்தப் பயனும் இல்லை. முதல்வர் மாஞ்சி சாதி அரசியல் செய்கிறார்" என்று கத்தியதாக சம்பவ இடத்தில் இருந்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.
ஷூவை வீசிய இளைஞரின் பெயர் அமித்தேஷ் குமார். இவர் பீகாரின் சரண் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனது குறைகள் குறித்த புகார் கடிதங்களோடு ஜனதா தர்பாருக்கு கடந்து இரண்டு வருடங்களாக வருவதாகவும், அதனால் எந்தப் பயனும் இல்லை என்றும், புகார்களை யாரும் விசாரிப்பதில்லை என்று போலீஸார் நடத்திய விசாரணையின்போது அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.