தேஜ்பால் மீதான பலாத்கார வழக்கு: சோமா சவுத்ரி வாக்குமூலம் பதிவு
பனாஜி: டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பலாத்கார வழக்கில் அந்த வார இதழின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்ரி 5 மணி நேரம் வாக்குமூலம் கொடுத்தார்.
டெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண்தேஜ்பால் சக ஊழியரான பெண் பத்திரிகையாளர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். தேஜ்பாலை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், அவரை பனாஜியில் உள்ள குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை மேலும் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பாலியல் பலாத்காரம் நடந்ததாகக் கூறப்படும் நட்சத்திர ஹோட்டலுக்கு தேஜ்பாலை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
இதற்கிடையில், டெஹல்கா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்ரி பனாஜியில் உள்ள தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி, தேஜ்பால் வழக்கில் 5 மணி நேரம் வாக்குமூலம் கொடுத்தார்.
நீதிமன்றத்துக்கு வெளியே அவரை செய்தியாளர்கள் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்களை சந்திக்க சோமா மறுத்துவிட்டார்.