சிறப்பு அந்தஸ்து ரத்தாகி 3 மாதங்கள் தாண்டியாச்சு.. இப்போ எப்படி இருக்கிறது காஷ்மீர்?
ஸ்ரீநகர்: ஆகஸ்ட் 5ம் தேதி. காஷ்மீருக்கு சட்டப்பிரிவு 370ன் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாள். போராட்டங்கள் வெடிக்கும் என்ற அச்சத்தால், காஷ்மீரில் அன்று முதல், பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஏற்கனவே பல ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், இணையதள சேவைகள், ப்ரீபெய்டு போன் இணைப்புகள், உள்ளிட்டவையும் துண்டிக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர்.
இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 120 நாட்களை தொடப்போகிறது. காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களும் உதயமாகியாச்சு. இப்போது எப்படி இருக்கிறது காஷ்மீர். கள நிலவரம் பற்றி பிடிஐ செய்தி நிறுவனம் தொகுத்துள்ள தகவல்கள் இவைதான்:
கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் வியாழக்கிழமை மதியம் சில மணிநேரங்களுக்கு திறக்கப்பட்டன. ஸ்ரீநகர் நகரம் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளிலும் பொது போக்குவரத்து இயக்கம் அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், 370 வது பிரிவை ரத்து செய்வதற்கு கண்டனம் தெரிவிக்கும்விதமாக, பெரும்பாலான கடைக்காரர்கள் பிற்பகலில் தங்கள் கடைகளை மூடிவிட்டனர்.
370 வது பிரிவை ரத்து செய்வது தொடர்பாக மூன்று மாதங்களுக்கும் மேலாக பதற்ற சூழல் நிலவும்போதிலும், கடந்த சில வாரங்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு நிலைமை காணப்படுவதை மறுக்க முடியாது. கடந்த வாரம் புதன்கிழமை புதிதாக போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இதை மீறி வாகனங்களை இயக்கினாலோ, கடைகளை திறந்தோலா, விடமாட்டோம் என்று எச்சரிக்கும் வகையிலான, சுவரொட்டிகளையும் பார்க்க முடிந்தது.
முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இன்னமும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் உயர்மட்ட மற்றும் இரண்டாம் நிலை பிரிவினைவாத அரசியல்வாதிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.