#SaluteIndia campaign: மிக நீளமான விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு கின்னஸ் சாதனை செய்த "ஜோஷ் ஆப்"
டெல்லி: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குறும்பட வீடியோ செயலியான ஜோஷ் சுதந்திர தினத்தின் போது ஒருங்கிணைத்து பிரச்சாரம் செய்த நிகழ்வு உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
டிக்டாக் உள்ளிட்ட வெளிநாட்டு செயலிகளை காட்டிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஜோஷ் செயலி மிகவும் பாதுகாப்பானதாகும். இந்த செயலி மூலம் பலர் பெருமிதத்துடனும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற கம்பீரத்துடனும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
வாடிக்கையாளர்கள், வேகம், தரம், பாதுகாப்பு அம்சம் ஆகியவற்றில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்த ஜோஷ் செயலி தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி ஜோஷ் செயலி தேசிய கீதத்துக்கு மக்கள் வீரவணக்கம் செலுத்தும் வகையில் மிக நீளமான வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோவை உருவாக்க பயனாளிகளுக்கு போட்டியை வைத்தது ஜோஷ் நிறுவனம்.
மொத்தம் 5 வினாடிகள் இருக்க வேண்டும். ஜோஷ் செயலியை பயன்படுத்த வேண்டும். அந்த 5 வினாடி வீடியோவில் குழந்தை தொழிலாளர்கள், பாலின பாகுபாடுகள், ஊழல், வரதட்சிணை உள்ளிட்ட கொடூரமான விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்பதுதான் நிபந்தனைகள்.
இதையடுத்து 29,529 வீடியோக்கள் வரப்பெற்றன. இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி கோரக்பூர் சுற்றுலா மற்றும் கலாச்சாரம் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் 23,529 பேரிடம் இருந்து வீடியோக்கள் வரப்பெற்றன. இந்த சாதனையை ஜோஷ் முறியடித்துள்ளது.
கின்னஸ் சாதனையில் ஜோஷ் செயலியின் சல்யூட் இந்தியா பிரச்சாரம் இடம்பெற்றதற்கான சான்றிதழை ஜோஷ் செயலியின் நிறுவனர்கள் வீரேந்திர குப்தா மற்றும் உமாங் பேடி ஆகியோர் பெற்று கொண்டனர். இந்த பெருமிதத்துக்குரிய சம்பவம் குறித்து ஜோஷின் ஹெட் ஆப் கிரியேட்டர் சுந்தர் வெங்கடராமன் கூறுகையில் இந்த சாதனையை நாங்கள் மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறோம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த நீளமான வீடியோவை தயாரிக்கும் திறமையும் அர்ப்பணிப்பு எங்கள் நிறுவனத்திற்கு இருப்பதையே இந்த கின்னஸ் சாதனை காட்டுகிறது. இந்த பெரிய வீடியோவை உருவாக்கியவர்கள், பயனாளிகள், போட்டியில் கலந்து கொண்டவர்கள், மக்களின் பார்வையை உண்மையாக்க பாடுபட்டவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி என்றார்.
அது போல் ஜோஷ் நிறுவனர் வீரேந்திர குப்தா கூறுகையில் நமது செயலி இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் சமூகவலைதளங்களை பயன்படுத்தும் மக்களின் நாடித் துடிப்பை சரியாக புரிந்து கொண்டுள்ளது ஜோஷ். அளவுக்கு அதிகமான பெருமிதத்தால் எங்கள் இதயம் நிறைந்துள்ளது. தேசத்திற்காக தேசபக்தியை ஒற்றுமையாக காட்டிய ஆயிரக்கணக்கான இந்தியர்களை நினைத்து பெருமை கொள்கிறேன் என்றார்.