திருப்பதி போனா தேங்காய் கொண்டு போங்க! தட்டுப்பாடா இருக்காம்!!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. சாமிக்கு உடைக்க தேங்காய் கிடைக்காமல் பக்தர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை தினங்களில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள். வெள்ளிக்கிழமையன்றும், சனிக்கிழமையன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஏழுமலையானை தரிசனம் செய்யும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வெளியே மாவிளக்கு ஏற்றி தேங்காய் உடைத்து வழிபடுவது உண்டு தேங்காய்கள் தேவஸ்தான கடையிலேயே பக்தர்கள் பெற வேண்டும்.
இந்த நிலையில் திருப்பதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் தேங்காய் தட்டுப்பாடு நிலவியது தேங்காய் இல்லாமல் கடையே மூடப்பட்டு விட்டது. இதனால் தேங்காய் கிடைக்காமல் பக்தர்கள் தவிப்பிற்குள்ளானார்கள். சனிக்கிழமை மதியம் வரை பக்தர்களுக்கு தேங்காய் கிடைக்கவில்லை. தேவஸ்தானத்திற்கு தேங்காய் சப்ளை செய்யும் காண்டிராக்டர்களின் அலட்சியத்தால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மாவிளக்கு ஏற்றிய பக்தர்கள் கற்பூரம் மட்டும் ஏற்றி வழிபாட்டை முடித்தனர். ஆனாலும் ஏழுமலையானுக்கு தேங்காய் உடைக்காதது எங்களுக்கு திருப்தி அளிக்க வில்லை என்று அவர்கள் குறைப்பட்டுக்கொண்டனர் பக்தர்கள்.