பஞ்சாப்பில் ஆர்எஸ்எஸ் 'ஷாகா' மீது மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு!!
லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்சி நிகழ்வான ஷாகா நடைபெறும் மைதானம் நோக்கி மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லூதியானாவின் கித்வாய் நகர் பூங்காவில் இன்று ஆர்எஸ்எஸ் ஷாகாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது ஷாகா நடைபெற இருந்த மைதானம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற தலையில் குல்லா அணிந்திருந்த மர்ம நபர்கள் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதனால் அங்கு திடீரென பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும் ஷாகா நடைபெற இருந்த மைதானத்தில் பெரிய அளவுக்கு கூட்டம் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் ஷாகா மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.