மே.வங்க அரசின் தலையீடு... மீண்டும் பள்ளிக்கு செல்கிறான் எச்ஐவி பாதித்த 7 வயது சிறுவன்!
கொல்கத்தா: எச்ஐவி பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனை பள்ளிக்கு வரக் கூடாது என்று தடுத்து நிறுத்திய தனியார் பள்ளிக்கூட விவகாரத்தில் மேற்கு வங்க அரசு தலையிட்டதைத் தொடர்ந்து தற்போது அந்த சிறுவன் மீண்டும் பள்ளிக்கு வரவுள்ளான்.
மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானா மவட்டத்தில் உள்ள பிஷ்னுப்பூரைச் சேர்ந்தவன் அந்த சிறுவன். அவனுக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளது. இதையடுத்து ஐந்து மாதங்களுக்கு முன்பு அவனை பள்ளியிலிருந்து நீக்கியது பள்ளி நிர்வாகம்.
மேலும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் அந்த சிறுவனின் தாய் வழி பாட்டியையும், எச்ஐவி பாதித்துள்ளதா என்று சோதனை நடத்தி சான்றிதழை சமர்ப்பிக்குமாறும் பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.
தனியார் பள்ளியின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தங்களது பள்ளியில் படிக்கும் இதர மாணவர்களின் பெற்றோர்கள் இந்த சிறுவனை நீக்காவிட்டால், தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று கூறியதால்தான் எச்ஐவி பாதித்த சிறவனை நீக்க வேண்டியதாயிற்று என்று பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இதையடுத்து அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டது. அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்து கூட்டம் போட்ட மாவட்ட நிர்வாகம், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. மாநில மகளிர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சர் சசி பாஞ்சா உத்தரவின் பேரில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் அதே பள்ளியில் படிக்க தாங்களுக்கு ஆட்சேபனை இல்லை என மற்ற பெற்றோர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து திங்கள்கிழமை முதல் இந்த சிறுவன் மீண்டும் தனது படிப்பைத் தொடரவுள்ளான்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சஞ்சிப் நஸ்கர் கூறுகையில், ‘மீண்டும் சிறுவனை வரவேற்க மகிழ்ச்சி அடைகிறோம். மற்ற பெற்றோர்கள் ஆட்சேபித்ததால் தான் நாங்கள் நிறுத்த நேரிட்டது. தற்போது அனைவருக்கும் இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம். மீண்டும் அந்த சிறுவன் தனது படிப்பை தொடர்வதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே' என்றார்.
அந்த சிறுவனின் தாயாருக்கு கடந்த ஜனவரி மாதம்தான் எச்ஐவி பாதிப்பு இருந்தது தெரியவந்தது. தற்போது அவர் ஒரு என்ஜிஓ நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவர் மூலமாகவே இந்த சிறுவனுக்கும் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.