ஸ்ட்ரெச்சரில்.. சிறுமியின் உடலை கடித்து சாப்பிட்ட தெருநாய்.. பகீர் கிளப்பும் உபி.. ஷாக் வீடியோ!
உபியில், சிறுமியின் சடலத்தை கடித்து சாப்பிட்டுள்ளது ஒரு தெருநாய்
கான்பூர்: இறந்துபோன சிறுமியின் சடலத்தை, தெரு நாய் ஒன்று கடித்து இழுக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. நேற்று நடந்த சாலை விபத்தில் ஒரு சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார்.. இதையடுத்து அவரது சடலத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த ஆஸ்பத்திரியின் ஸ்ட்ரெச்சரில் சிறுமியின் உடல் வைத்திருந்தனர்.. அந்த ஸ்ட்ரெச்சர், ஆஸ்பத்திரியின் படிக்கட்டுக்கு அடியில் நிறுத்தப்பட்டிருந்தது... அப்போது அங்கு ஊழியர்களும் யாரும் இல்லை... அந்த நேரம் பார்த்து ஒரு தெருநாய் அங்கு புகுந்தது.. நேராக ஸ்ட்ரெச்சருக்கு சென்று, தெருநாய் சிறுமியின் சடலத்தை கடிக்க ஆரம்பித்துவிட்டது.
அதிர்ச்சி காட்சி
இதை பார்த்த ஒருவர் வீடியோவாக எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்.. கிட்டத்தட்ட 20 நிமிஷம் அந்த வீடியோ ஓடுகிறது.. சடலத்தை தெருநாய் கடிப்பதை பார்த்த பலரும் அதிர்ந்து விட்டனர்.. அரசு ஆஸ்பத்திரியின் லட்சணம் இதுதானா? என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர்.. ஒருவேளை அந்த சிறுமி ஆஸ்பத்திரிக்கு வரும் முன்பே இறந்துவிட்டாரா? அல்லது வந்துதான் அலட்சியத்தால் இறந்துபோனாரா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
காரணங்கள்
ஆனால், அதற்குள் எல்லா ஃபார்மாலிட்டியும் முடிந்து சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்படி ஒரு வீடியோ வைரலாகி வருவதை கண்ட ஆஸ்பத்திரி நிர்வாகம், "தெருநாய் தொந்தரவு ஆஸ்பத்திரியில் எப்பவுமே அதிகமாக இருப்பதாகவும், அதிகாரிகளுக்கு நாங்கள் எத்தனையோ முறை இதை பற்றி லெட்டர் எழுதியும் யாரும் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று காரணம் சொல்கிறது.
விளக்கம்
மேலும், சிறுமியின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் சொன்னதால், அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது என்றும், அவர்கள்தான் சடலத்தை எடுத்து சென்றனர், நாய் வந்து கடித்தபோது அதனை அவர்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம் என்றும் ஆஸ்பத்திரி தரப்பு விளக்கம் சொல்கிறது.. இந்த செய்தியை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது..
சஸ்பெண்ட்
அதேபோல, இந்த வீடியோவை சமாஜ்வாடி கட்சியும் ஷேர் செய்ததுடன், சம்பந்தப்பட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த அளவுக்கு விஷயம் பெரிதானதை அடுத்து, அந்த ஆஸ்பத்திரியின் வார்டு பாய், துப்புரவு பணியாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்களாம்.. மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஆஸ்பத்திரி தரப்பில் சொல்லப்படுகிறது.