பேனா பிடிக்க வேண்டிய வயதில் துடைப்பத்தை பிடிக்கும் 'காக்கா முட்டை'கள்
டெல்லி: இந்தியாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை சிறுவர், சிறுமியர் அதிக அளவில் வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் கல்வி வசதி சிறப்பாக உள்ளது. நகர்ப்புற ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சராசரியாக 229 மாணவ, மாணவியர் உள்ளனர். பல குழந்தைகள் படிக்க வசதியாக நகர்ப்புறங்களில் 11 சதவீதம் பள்ளிகளில் இரண்டு ஷிப்டுகள் உள்ளன. நகர்ப்புறங்களில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பலர் தங்களின் படிப்பை பாதியில் நிறுத்திவிடுகிறார்கள்.
நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைகள் வேலை தேடி அடிக்கடி இடத்தை மாற்றுவதால் அவர்களின் குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துகிறார்கள்.
படிப்பு
டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில் 45 சதவீதம் பேருக்கு ஒரு வார்த்தையை கூட வாசிக்கத் தெரியவில்லை. அதுவே தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 20 சதவீதம் பேருக்கு தான் வாசிக்கும் பிரச்சனை உள்ளது.
குழந்தை தொழிலாளிகள்
இந்தியாவில் குழந்தை தொழிலாளிகள் முறை 2.2 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் நகர்ப்புற பகுதிகளிலோ கடந்த 2001ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 53 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிறுவர்கள்
நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் 5 முதல் 9 வயது வரை உள்ள ஏழை சிறுவர்கள் வேலைக்கு செல்வது 154 சதவீதமும், சிறுமிகள் வேலைக்கு செல்வது 240 சதவீதமும் அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை
நகர்ப்புறங்களில் மக்கள் தொகை வேகமகாக அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் மக்கள் தொகை 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் வேலைக்கு அனுப்ப ஏராளமான குழந்தைகள் உள்ளனர்.
சிறுமிகள்
பெரும்பாலான இந்திய வீடுகளில் வேலைக்கு பணிப்பெண்கள் வைத்துக் கொள்கிறார்கள். வீட்டு வேலைக்கு ஆட்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள். இதனால் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்களில் இருந்து ஏழைச் சிறுமிகள் கடத்தப்படுகிறார்கள்.
பாலியல் தொழில்
பதின்வயது ஏழை சிறுமிகள் கடத்தப்பட்டு வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் கடத்தப்படும் சிறுமிகள் பாலியல் தொழிலிலும் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுகிறார்கள்.