சென்சார் போர்டை சீரமைக்க ஷியாம் பெனகல் தலைமையில் குழு
டெல்லி: சென்சார் போர்டு அமைப்பை சீரமைப்பதற்காக பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
சென்சார் போர்டு தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. தற்போதைய சென்சார்டு போர்டு தலைவர் பெஜலாஜ் நிகலானிக்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்பெக்டரில் சில காட்சிகள் நீக்கப்பட்ட விவகாரம் கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது. அதேபோல் மேரா தேஷ் கி மகான் மேரா தேஷ் கி ஜவான் என்ற பெயரில் அண்மையில் ஒரு செய்திப் படம் தயாரிக்கப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடியை ஹீரோவாக சித்தரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த படத்தை மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் பெகலாஜ் நிகலானி திரையரங்குகளுக்கு விநியோகம் செய்துவிட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனால் நிகலானி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்பட்டுவந்தது.
இந்நிலையில் சென்சார்டு போர்டை சீரமைத்து பரிந்துரைகளை வழங்குவதற்காக பிரபல இயக்குனர் ஷியாம் பெனகல் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
இதில் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, அத்மன் பியூஷ் பாண்டே, திரைப்பட விமர்சகர் பாவனா சோமய்யா, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கவுன்சில் இயக்குனர் நினா லதா குப்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவானது தனது அறிக்கையை 2 மாதத்திற்குள் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.