சியாச்சினில் பலியான 9 வீரர்களின் உடல்கள் இன்று டெல்லி வருகிறது
ஜம்மு: சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியான 9 வீரர்களின் உடல்கள் சிகரத்தில் இருந்து லேவில் உள்ள ராணுவ முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அவர்களின் உடல்கள் இன்று டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
கடந்த 3ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள உலகின் மிக உயரமான போர் முனையான சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த 10 வீரர்கள் சிக்கினர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. பனிச்சரிவு ஏற்பட்டு 6 நாட்கள் கழித்து வீரர் ஹனுமந்தப்பா 25 அடி ஆழ பனியில் உயிருடன் மீட்கப்பட்டார்.
டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். அதன் பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான கர்நாடக மாநிலத்தில் உள்ள பெடாதூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்டது.
மோசமான வானிலை
சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய 4 தமிழக வீரர்கள் உள்பட 9 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். கடந்த 9ம் தேதி அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டும் மோசமான வானிலை காரணமாக அவர்களின் உடல்கள் சியாச்சினில் இருந்து கொண்டு செல்ல முடியவில்லை.
சியாச்சின்
சியாச்சினிலேயே வைக்கப்பட்டிருந்த 9 வீரர்களின் உடல்கள் நேற்று தான் ஹெலிகாப்டர்கள் மூலம் மலையில் இருந்து இறக்கி மலையடிவாரத்தில் உள்ள ராணுவ முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.
வானிலை
மலையடிவார முகாமில் இருந்து வீரர்களின் உடல்கள் லேவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து அவர்களின் உடல்கள் டெல்லிக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகின்றன.
டெல்லி
வீரர்களின் உடல்கள் டெல்லிக்கு வந்த பிறகு அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பலியானவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.