சியாச்சின் பனி மலை.. உலகின் மிக உயரமான போர்க்களம்.. சுற்றுலா பயணிகளுக்காக திறப்பு
ஸ்ரீநகர்: உலகின் மிக உயரமான போர்க்களமான இந்தியாவில் சியாச்சின் பனிமலை சிகரம் இப்போது சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படுவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக்கில் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலையின் மீதுள்ளது சியாச்சின் பனிமலை பகுதி. ஆண்டு முழுவதும் பனிகட்டிகளால் நிறைந்து காணப்படும் இந்த பகுதி தான் இந்தியா பாகிஸ்தான் இடையே கார்கில் போருக்கு காரணம் ஆகும்.
இந்நிலையில் அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அத்துடன் அம்மாநிலத்திற்காக சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மற்ற மாநிலங்களைப் போல் மாற்றப்பட்டது.
வரலாறு காணாத பனிப்பொழிவில் காஷ்மீர்... உறைந்து போனது தால் ஏரி
சியாச்சின் செல்ல அனுமதி
அதன்பிறகு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக சியாச்சின் பனிமலைப் பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்பட உள்ளது. இந்திய ராணுவம் 1970 முதல் 1984 வரை சுற்றுலா பயணிகளை அனுமதித்தது. அதன்பிறகு அனுமதிக்கவில்லை.
அக்டோபர் 31 முதல்
லடாக் தனி யூனியன் பிரதேசமாக வரும் அக்டோபர் 31ம் தேதி முதல் செயல்பட உள்ள நிலையில் அங்குள்ள சியாச்சின் பனிமலை சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படுவது குறித்து மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளது.
ராஜ்நாத் சிங் திறந்தார்
லடாக்கின் சையாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கோலனெல் ஷேவாங் ரின்சன் (Colonel Chewang Rinchen) பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் தலைமை ராணுவ தளபதி பிபின் ராவத்துடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கலந்து கொண்டார்.
சுற்றுலாவுக்கு அனுமதி
அதன் பின்னர் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சுற்றுலாதுறையில் மிகப்பெரிய ஆற்றலை லடாக் பெற்றுள்ளது, நல்ல சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும் போது பெரிய அளவிலான சுற்றுலா பயணிகளை லடாக் பெறும். சுற்றுலாவிற்காக சியாச்சின் பிரதேசம் திறக்கப்படுகிறது. சியாச்சினில் உள்ள அடிவார முகாமில் தொடங்கி குமார் போஸ்ட் பகுதி வரையில் உள்ள ஒட்டுமொத்த பகுதிகளும் சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட அனுமதி கொடுத்துள்ளோம்" என்றார்.
சியாச்சின் பயணம்
முன்னதாக ராஜ்நாத் சிங் கடந்த ஜுன் மாதம் தலைமை ராணுவ தளபதி பிபின் ராவத்துடன் சியாச்சின் பனிமலை பிரதேசத்திற்கு சென்றார். அங்குள்ள ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடிய அவர், அவர்களின மன உறுதி மற்றும் அர்பணிப்பை வெகுவாக பாராட்டினார்.