அனுமார் பெயரை சூட்டினோம், சிரஞ்சீவியாக வந்தார்.. உயிர் பிழைத்த வீரரின் தந்தை உருக்கம்
பெங்களூர்: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பிறகு அதிசயமாக உயிரோடு மீட்கப்பட்டுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த ராணுவ வீரர் லேன்ஸ் நாயக் ஹனுமந்தப்பா. ஆயினும் இந்த தகவலை அவரின் குடும்பத்தாருக்கு அரசு தெரிவிக்கவில்லை என்று சர்ச்சை வெடித்துள்ளது.
25 அடி ஆழ பனிக்குவியலுக்குள் சிக்கியிருந்தாலும், 6 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீட்கப்பட்டுள்ளார் ஹனுமந்தப்பா. டெல்லி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இன்னமும் ஹனுமந்தப்பா ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இத்தனை நாட்களுக்கு பிறகு ஹனுமந்தப்பா உயிரோடு வந்தது தார்வாரிலுள்ள அவரது பெற்றோர், மனைவி உள்ளிட்ட குடும்பத்தாருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
"கடவுள் அனுமரை நினைத்து, எனது மகனுக்கு பெயர் சூட்டினோம். எனவே அனுமாரை போலவே எனது மகனும் சிரஞ்சீவியாக மரணத்தை ஜெயித்து வந்துள்ளான்" என்று ஹனுமந்தப்பா தந்தை தெரிவித்தார்.
ஹனுமந்தப்பாவின் உறவினர் ரமேஷ் கொப்பட் 'ஒன்இந்தியாவிடம்' தொலைபேசியில் பேசுகையில், "எங்களது வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்டுள்ளார். ஹனுமந்தப்பாவின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. ஹனுமந்தப்பா உயிரோடு இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
Visuals from rescue efforts in Siachen yesterday after soldiers were buried in an avalanche last week (Source: MoD) pic.twitter.com/koDXI7BI4m
— ANI (@ANI_news) February 9, 2016
அதேநேரம், அரசு தரப்பில் இருந்து அவர் உயிரோடு இருப்பது குறித்தும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது குறித்தும் ஹனுமந்தப்பா குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. தொலைக்காட்சி செய்தியை பார்த்துதான், நாங்கள் அறிந்து கொண்டோம். எனவே, ஹனுமந்தப்பாவை சந்திப்பதற்காக, விமானத்தில், டெல்லி செல்கிறோம்" என்றார்.
ஹனுமந்தப்பா தந்தை மட்டுமின்றி, தாய் பசம்மா, மனைவி மகாதேவி மற்றும் குடும்பத்தை சேர்ந்த மேலும் சிலரும், டெல்லி மருத்துவமனையில் ஹனுமந்தப்பாவை சந்திக்க செல்கிறார்கள்.