நிலம், நீர், மொழியைவிட மனிதாபிமானம் முக்கியம்.. இரு மாநில மக்கள் அமைதிகாக்க சித்தராமையா கோரிக்கை
பெங்களூர்: பொதுமக்கள் அமைதிகாக்க முதல்வர் சித்தராமையா நேற்று அறிக்கை மூலம் கோரிக்கைவிடுத்தார். இன்று டிவி செய்தி சேனல்களில் வீடியோ மூலம் சித்தராமையா அமைதிக்காக கோரிக்கை விடுத்தார்.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது, தமிழகத்தில் கன்னடர் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களால் பெங்களூரில் நேற்று கன்னட அமைப்பினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் வாகனங்கள் தீக்கிரையாகின. அடையார் ஆனந்தபவன், பூர்வீகா போன்ற தமிழக நிறுவனங்கள் பெங்களூரில் அடித்து நொறுக்கப்பட்டன.
இதையடுத்து மாலையில் 144 தடையுத்தரவு பெங்களூரில் அமல்படுத்தப்பட்டது. கலவரம் தொடர்ந்ததால், 16 காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெங்களூர் நகர நிலவரம் உலகமெங்கும் சர்ச்சைக்குள்ளானது. கண்டனத்திற்குள்ளானது.
இந்நிலையில் பொதுமக்கள் அமைதிகாக்க முதல்வர் சித்தராமையா நேற்று அறிக்கை மூலம் கோரிக்கைவிடுத்தார். இன்று டிவி செய்தி சேனல்களில் வீடியோ மூலம் சித்தராமையா அமைதிக்காக கோரிக்கை விடுத்தார்.
அதில் அவர் கூறுகையில், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு அடுத்தடுத்து அநியாயம் இழைக்கப்படுவதால் கன்னடர்கள் ஆதங்கத்தில் இருப்பது உண்மைதான். தமிழகத்தில் கன்னடர் தாக்கப்பட்டது, கன்னடர் ஹோட்டலில் தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கதுதான். நிலம், நீர், மொழி ஆகிய விவகாரங்களில் கன்னடர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவர்கள் என்பதும் உண்மைதான்.
ஆனால், இந்த அனைத்து எல்லைகளையும் விட மனித மனத்திலுள்ள மனிதாபிமானம் முக்கியம். எனவே இரு மாநில மக்களும், வன்முறை போராட்டத்தை கைவிட வேண்டும். கன்னடர்கள் அமைதி பிரியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா கோரிக்கைவிடுத்தார்.