சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்தபோது ஷூ அணிந்திருந்தாரா சித்தராமையா? திடீர் சர்ச்சை
பெங்களூர்: மைசூர் தசரா விழாவின்போது சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, மலர் தூவி மரியாதை செலுத்தியபோது காலில் ஷூ அணிந்திருந்ததாக வெளியான செய்திகளால் சர்ச்சை வெடித்துள்ளது. இதற்கு முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மைசூர் தசரா உலக பிரசித்தி பெற்றது. கடந்த 4ம்தேதி மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் விஜயதசமி விழா நடைபெற்றது. 750 கிலோ எடை கொண்ட அம்பாரி மற்றும் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையை அர்ஜுனா என்ற பெயர் கொண்ட யானை சுமந்தபடி மைசூர் வீதிகளில் நடந்து வந்தது.
அம்மனுக்கு மரியாதை
இப்படி யானை ஊர்வலம் வரும்போது, குறிப்பிட்ட இடத்தில், முதல்வர் பதவியில் இருப்பவர்கள் அம்மனுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி முதல்வர் சித்தராமையா, இதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் ஏறி நின்றபடி அம்மனுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்படி மரியாதை செலுத்தியபோது, சித்தராமையா காலில் ஷூ அணிந்திருந்ததாக சில கன்னட மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.
சித்தராமையா அதிருப்தி
சாமுண்டீஸ்வரி அம்மன் மீது மலர் தூவியபோது, சித்தராமையா வெள்ளை நிற ஷூ அணிந்தபடி நின்றிருந்ததாகவும், இதனால் கர்நாடகாவில் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் மீடியாக்கள் எச்சரித்தன. இந்த தகவலை அறிந்ததும் முதல்வர் கடும் அதிருப்தியடைந்தார். ஏனெனில் நாத்தீகராக இருந்தாலும்கூட, மைசூர் மாவட்டத்தை சேர்ந்தவரான, சித்தராமையாவுக்கு சாமுண்டீஸ்வரி தேவி மீது பக்தி உண்டு. எனவே அம்மனுக்கு அவமரியாதை செய்துவிட்டதாக வெளியான செய்தி சித்தராமையாவை வேதனைபடுத்தியது.
மடாதிபதி எச்சரிக்கை
சாமுண்டீஸ்வரி தேவிக்கு, காலில் 'ஷூ' வுடன் மலர் தூவிய, முதல்வர் சித்தராமையா, இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டார். சாமுண்டீஸ்வரி தேவியை அவமானம் செய்துவிட்டார். அவர் மீது, ஹூப்ளி போலீசில் புகார் கொடுக்கப் போகிறேன்,'' என, ஹூப்ளி மடாதிபதி பிரணவ சுவாமிகள் கூறியது சித்தராமையாவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அது ஷூ இல்லை, சாக்ஸ்
இந்நிலையில், முதல்வர் அலுவலகம், இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. "தசரா விழாவின்போது நான் கறுப்பு நிற ஷூவும், முழங்கால் வரையில் மட்டுமே நீட்டிக்க கூடிய வெள்ளை நிற சாக்சும் அணிந்திருந்தேன்.
மீடியாக்கள் அவசரம்
ஜம்போ சவாரி என் அருகில் வந்தபோது ஷூவை கழற்றிவிட்டு சாக்சுடன் மேடையில் ஏறி அம்மன் மீது மலரை அர்ச்சித்து மரியாதை செலுத்தினேன். இதை தெரிந்துகொள்ளாமல், சாக்சை பார்த்து ஷூ என்று நினைத்துக் கொண்டு, சில மீடியாக்களும், சமூக வலைத்தளங்களும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. நான் மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பு கொடுப்பவன். சாமுண்டீஸ்வரி மீது மிகுந்த பக்தி கொண்டவன். யாருடைய மனதையும் நான் புண்படுத்தவில்லை". இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆதார புகைப்படம்
மேலும், விழாவின்போது கறுப்பு நிற ஷூ அணிந்திருந்ததற்கான ஆதார புகைப்படங்களையும் முதல்வர் அலுவலகம் வெளியிட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்துள்ளது.