நாற்காலியில் இருந்து தவறி விழுந்தார் சித்தராமையா: தலையில் காயம்
நாற்காலியில் இருந்து தவறி விழுந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
Recommended Video
மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் தேர்தல் பிரசாரத்தின் போது கட்சி தலைவர் வீட்டில் உணவு அருந்த நாற்காலியில் உட்காரந்த போது அதிலிருந்து கீழே விழுந்தார் சித்தராமையா. அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாஜகவும், காங்கிரஸும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் அவ்வப்போது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
5 நாட்கள் பிரசாரம்
அவர் போட்டியிட உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் 5 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் மாவின்ஹள்ளியில் உள்ள கட்சியின் தலைவர் வீட்டில் உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பயங்கர சப்தம்
இதில் கலந்து கொள்ள சித்தராமையா சென்றார். அங்குள்ள பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தபோது நாற்காலி சரிந்து கீழே விழுந்தார். அப்போது பயங்கர சப்தம் கேட்டதை அடுத்து அனைவரும் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவருடன் முன்னாள் எம்எல்ஏ சத்யநாராயணாவும், நண்பர் எம் சித்தேகௌடாவும் இருந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
சித்தராமையா உட்கார்ந்த பிளாஸ்டிக் நாற்காலி ஏற்கெனவே உடைந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து தலையில் காயம் அடைந்த அவர் பாதுகாப்பு படையினர் உதவியுடன் அங்கிருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ராகுலுடன் பிரசாரம்
மருத்துவ பரிசோதனையில் தலையில் சிறியதாக வெட்டுக் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பிரசாரத்தை முடித்து கொண்டு அவர் பெங்களூர் விரைந்தார். இன்று ராகுல் காந்தியுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.