கர்நாடகாவில் வசிக்கும் எல்லோரும் கன்னடம் கற்பது கட்டாயம்.. சித்தராமையா திட்டவட்டம்
பெங்களூர்: கர்நாடகாவில் வசிக்கும் எல்லோரும் கன்னடம் கற்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
அனைத்து பள்ளிகளிலும் கன்னட பாடம் கட்டாயம் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் வசித்துக்கொண்டு கன்னடத்தை கற்காவிட்டால் அது அந்த மொழிக்கு செய்யும் அவமரியாதை என்றும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் உதயமான 62வது ராஜ்யோத்சவா விழா பெங்களூர் கண்டீரவா மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. அதில் பங்கேற்று, சித்தராமையா பேசுகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், தான் எந்த மொழிக்கும் எதிரான நபர் இல்லை என்றபோதிலும், கர்நாடகாவில் இருப்போர் கன்னடம் பேசுவதுதான் சரியானது என்றார் அவர்.
62nd Karnataka Rajyotsava being celebrated at Kanteerava stadium in Bengaluru. CM Siddaramaiah present pic.twitter.com/If0DgRMfZ9
— ANI (@ANI) November 1, 2017
எந்த மொழியினராக இருந்தாலும், கர்நாடகாவில் வசிப்போர், தங்கள் குழந்தைகளுக்கு கன்னடம் கற்றுத்தர வேண்டும் என்றார் அவர். பெங்களூர், மைசூர், ஷிமோகா உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நிலையில், சித்தராமையா இவ்வாறு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.