பிரசாரத்தில் தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் மோடிக்கு சித்தராமையா அவதூறு நோட்டீஸ்
பிரசாரத்தில் தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் மோடிக்கு சித்தராமையா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பெங்களூரு : தன் மீதும், தன்னுடைய அரசு மீதும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் பிரதமர் மோடிக்கு கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் வருகிற மே 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், தன் மீதும் தன் அரசு மீது தொடர்ந்து தொடர்ந்து மோடி அவதூறு பரப்பி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரசாரக் கூட்டங்களில் பேசிய மோடி கொலை செய்வதற்கான சூழ்நிலை கர்நாடகத்தில் ஏற்பட்டு உள்ளது என்றும், 10 சதவிகித கமிஷன் அரசு என்றும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதற்கும், மே 1-ம் தேதி உடுப்பியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்கும் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.