லோக்சபா தேர்தலுக்கு பிறகு கவிழ்கிறதா கர்நாடக கூட்டணி அரசு? உச்சகட்ட குழப்பம்
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
இதனால் அடுத்த லோக்சபா தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடருமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை பொதுத் தேர்தலில் 78 இடங்களை வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் மட்டுமே வென்ற மஜதவை ஆட்சியமைக்க ஆதரவு அளித்து அக்கட்சியின் குமாரசாமியை முதல்வராக்கியுள்ளது.
இதையடுத்து முன்னாள் முதல்வர் சித்தராமையா இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸின் கர்நாடக மாநில தலைவர் பரமேஷ்வருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்துள்ளது.
சித்தராமையா தேவகவுடா மோதல்
சித்தராமையாவுக்கும் மஜத தேசிய தலைவர் தேவகவுடாவுக்கும் விரிசல் உள்ளது. மஜதவில் இருந்த சித்தராமையா இந்த மோதலால்தான் 2006ல் பிரிந்து வந்து காங்கிரசில் சேர்ந்தார். இப்போது சித்தராமையா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் உரிய இடம் தரப்படவில்லை. முன்னாள் சீனியர் அமைச்சர்களுக்கு கூட இந்த கேபினெட்டில் இடம் கிடைக்கவில்லை. காரணம், சித்தராமையா ஆதரவாளர்கள் என்பதுதான்.
நெக்ஸ்ட் ரெஸ்ட்
இதனால் கோபமடைந்த சித்தராமையா மங்களூர் அருகேயுள்ள ஒரு இயற்கை வைத்தியசாலையில் கடந்த 11 நாட்களாக சென்று ஓய்வு என கூறி அமர்ந்துவிட்டார். அங்கிருந்தபடி தனக்கு நெருக்கமான எம்எல்ஏக்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது இந்த அரசு லோக்சபா தேர்தலுக்கு பிறகும் நீடிப்பது கஷ்டம் என அவர் பேசிய வார்த்தைகளை யாரோ ஒளிப்பதிவு செய்து அதை மீடியாக்களுக்கு கொடுத்துவிட்டனர். இதனால் மஜத தலைவர்கள் கோபத்தில் உள்ளனராம்.
லீக்கான வீடியோ, ஆடியோ
வீடியோ, ஆடியோ வெளியானதற்கு காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்படவில்லை. ஆனால், சித்தராமையாவோ, தனது பலத்தை காட்டும்விதமாக 2 அமைச்சர்கள் உட்பட 10 காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. இதுபற்றி பரமேஷ்வரிடம் நிருபர்கள் கேட்டபோது, நான்கூட நலம் விசாரிக்க சென்று சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தினேன். இதை பலத்தை காட்டும் கூட்டம் என நினைக்க கூடாது என்றார்.
பதவி தேவை
பெங்களூர் வந்துள்ள சித்தராமையா தனது ஆதரவாளர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். அவரது ஆதரவாளர்களுக்கு வாரியங்கள், கழகங்களில் தலைவர் பதவி தரப்பட வேண்டும், அமைச்சர் பதவியில் கூடுதல் இடங்கள் வேண்டும் என்று சித்தராமையா லாபி செய்வதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் இதற்கு சம்மதிக்காத பட்சத்தில் சித்தராமையா ஆதரவு எம்எல்ஏக்கள் கிளர்ச்சியில் ஈடுபடலாம் என்பதால் பரபரப்பு அரசியல் சூழ்நிலை கர்நாடகாவில் நிலவுகிறது. லோக்சபா தேர்தலை கூட்டணியாக இணைந்து சந்திப்பதுதான் பாஜகவுக்கு பாதகம் என்பதால் அதுவரை இரு கட்சிகளும் பொறுமையாக இருப்பார்கள். எனவே அதற்கு முன்பாக தனக்கு தேவைப்படுவதை சாதிக்க சித்தராமையா அவசரம் காட்டுகிறாராம்.