ராஜினாமா வேண்டாம்.. தண்ணீரை நிறுத்தாதீர்கள்.. சித்தராமையாவுக்கு காங். தலைவர்கள் எச்சரிக்கை
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது, தமிழகத்தில் கன்னடர் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களால் பெங்களூரில் நேற்று கன்னட அமைப்பினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் வாகனங்கள் தீக்கிரையாகின. அடையார் ஆனந்தபவன், பூர்வீகா போன்ற தமிழக நிறுவனங்கள் பெங்களூரில் அடித்து நொறுக்கப்பட்டன.
இதையடுத்து மாலையில் 144 தடையுத்தரவு பெங்களூரில் அமல்படுத்தப்பட்டது. கலவரம் தொடர்ந்ததால், 16 காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்திற்கு செல்லும் காவிரி நதி நீரை நிறுத்திவிட்டு, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் இழப்பு
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 10 நாட்களுக்கு தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடகா தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம், நேற்று முதல் தினமும் தலா 12 ஆயிரம் கன அடி தண்ணீரை 20ம் தேதிவரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கலவரம்
சீராய்வு மனு காரணமாக கூடுதலாக 30 ஆயிரம் கன அடி தண்ணீர், தமிழகத்திற்கு கிடைக்கும். இதனால் மேலும் கோபமடைந்த கன்னட அமைப்புகள் மற்றும் சில விஷமிகள் நேற்று பெங்களூரில் பெரும் கலவரங்களை நடத்தினர்.
ராஜினாமா திட்டம்
தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள், வர்த்தக நிறுவனங்களை தேடி தேடி அடித்து நொறுக்கினர். இந்நிலையில் கர்நாடக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரை நிறுத்திவிட்டு முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய திட்டமிட்டதாக கூறப்பட்டது.
தகவல் வெளியானது
காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஏற்கனவே சித்தராமையா நடத்திய ஆலோசனை கூட்டத்தின்போது இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், அமைச்சரவையில் இதை இறுதி செய்ய சித்தராமையா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
மூத்த தலைவர்கள் முட்டுக்கட்டை
ஆனால், வீரப்பமொய்லி, ஆஸ்கர் பெர்ணான்டஸ், ஹரிபிரசாத் போன்ற கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கர்நாடகாவை சேர்ந்தவரும் லோக்சபா காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர், மல்லிகார்ஜுன கார்கே போன்றோர் இவ்வாறு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட வேண்டாம் என சித்தராமையாவுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளனர்.
ராஜினாமா முடிவு ஒத்திவைப்பு
கர்நாடக அரசு இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினால் பிற நதிநீர் விவகாரங்களில் உச்சநீதிமன்றத்தின் கோபத்திற்கு கர்நாடகா ஆளாக நேரிடும் என்பது இந்த எச்சரிக்கைக்கு காரணமாம். எனவே சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.