தமிழக முதல்வருக்கு நேரம் ஒதுக்குவது குறித்து பரிசீலனை.. சித்தராமையா தகவல்
தமிழக முதல்வருக்கு நேரம் ஒதுக்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: காவிரியில் நீர் திறப்பது தொடர்பாக தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்டுள்ளது குறித்து பரிசீலனை செய்து வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
காவிரியில் நீர் திறந்து விட கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியில் நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக நேரம் ஒதுக்குமாறு கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு அரசாணையில், டெல்டா பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாததால், காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டெல்டா மாவட்ட அமைச்சர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.
முதல்வர் மற்றும் டெல்டா மாவட்ட அமைச்சர்கள் பெங்களூரு சென்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டதாகவும், இதற்காக நாள் மற்றும் நேரம் ஒதுக்கக் கோரி கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலாளருக்கு கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் தமிழக முதல்வர் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றது. அவருக்கு நேரம் ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார்.