பிறந்த வேகத்திலேயே பிளக்கும் சித்து கட்சி!
முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவின் அரசியல் கட்சி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் 2 முக்கியத் தலைவர்கள் ஆம் ஆத்மியில் சேரவுள்ளனர்.
சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான நவ்ஜோத் சிங் சித்து உருவாக்கிய கட்சி பிறந்த வேகத்திலேயே பிளவுபடும் நிலைக்குப் போய் விட்டது.
பாஜகவில் இருந்து வந்த சித்து எம்.பியாகவும் இருந்தவர். பின்னர் கட்சி மேலிடத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கட்சியை விட்டு விலகினார். அவர் ஆம் ஆத்மியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் அவர் ஆவாஸ் இ பஞ்சாப் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சி தற்போது உடையும் நிலைக்கு வந்து விட்டது. அக்கட்சியை உருவாக்கியவர்களில் 2 முக்கியமான தலைவர்கள் தற்போது கட்சியை விட்டு விலகி ஆம் ஆத்மியில் சேர்ந்து பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனராம்.
இந்தத் தலைவர்கள் லூதியானாவைச் சேர்ந்த சிம்ரஞ்சித் பெய்ன்ஸ் மற்றும் அவரது சகோதரர் பல்விந்தர் சிங் பெய்ன்ஸ். இருவரும் லூதியானாவில் சுயேச்சை எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள். இவர்கள் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை பதிந்தா நகரில் வைத்து சந்தித்துப் பேசியுள்ளனர்.
இன்று ஆம் ஆத்மி கட்சியில் அவர்கள் சேரவுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம்தான் சித்து புதிய கட்சியைத் தொடங்கினார். கெஜ்ரிவால் மீது ஆரம்பத்தில் அபிமானம் வைத்திருந்த அவர் பின்னர் திடீரென அதிலிருந்து பின்வாங்கினார். கெஜ்ரிவாலை சர்வாதிகாரி என்றும் விமர்சித்தார்.
இந்த நிலையில் தற்போது சித்துவின் கட்சி உடையப் போகிறது. அதேசமயம், சித்துவிடம் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி தூது விட்டிருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. கட்சியைக் கலைத்து விட்டு ஆம் ஆத்மியில் வந்து சேர்ந்து விடுங்கள் என்று சித்துவிடம் கூறப்பட்டு வருகிறதாம். ஆனால் அவர் கருத்து தெரிவிக்காமல் உள்ளாராம்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலத் நடைபெறவுள்ளது என்பது நினைவிருக்கலாம்.