சீக்கிய கலவர வழக்கு: டைட்லரை சிபிஐ காப்பாற்றுகிறது.. பிரதமருக்கு பிரபல வழக்கறிஞர் பரபரப்பு கடிதம்
டெல்லி: சீக்கியர் கலவரம் விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் டைட்லரை சிபிஐதான் பாதுகாக்கிறது என்று மூத்த வழக்கறிஞர் ஹெச்.எஸ்.பூல்கா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
1984ம் ஆண்டு சீக்கியர் கலவர வழக்கை திரும்பவும் விசாரிக்க வேண்டும் என்றும், ஜகதீஷ் டைட்லரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும், அந்த கடிதத்தில் பூல்கா கேட்டுக்கொண்டுள்ளார்.
டைட்லருக்கு எதிரான சாட்சியத்தின், வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்யாத நிலையில், அவருக்கு ஆதரவான வாக்குமூலத்தை சிபிஐ பதிவு செய்தது. ஒருதலைபட்சமாக சிபிஐ நடந்து கொண்டது.
22 சாட்சியங்களின் வாக்குமூலத்தை ஏன் பதிவு செய்யவில்லை என கோர்ட் கேள்வி எழுப்பியபோது, அது அவர்களின் விருப்பம் என பதில் அளித்தது சிபிஐ. பகிரங்கமாகவே ஜகதீஷ் டைட்லருக்கு சிபிஐ ஆதரவு தெரிவித்தது அம்பலமாகியுள்ளது. ஜகதீஷ் டைட்லருக்கு எதிராக வழக்கு திரும்பிவிடும் என்ற அச்சத்தால், அபிஷேக் வர்மாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தாமல் சிபிஐ காலம் தாழ்த்தி வருகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் பிரதமராக பதவி வகித்தவருமான இந்திரா காந்தி, சீக்கிய இனத்தை சேர்ந்த தனது மெய்க்காப்பாளர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதால், சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆதரவாளர்கள் பெரும் வன்முறை வெறியாட்டம் நடத்தினர். டெல்லி, பஞ்சாப் என பல இடங்களில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் முக்கியமாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவர்தான் ஜகதீஷ் டைட்லர்.