மலை உச்சியில்.. சிக்கிமின் முதல் விமான நிலையம்.. திறந்து வைத்தார் மோடி
Recommended Video
கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் பயன்பாட்டுக்குத் தயாராகி விட்டது. சீன எல்லைக்கு அருகே அதாவது கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தொலைவில் பாக்யாங் என்ற இடத்தில் இந்த விமான நிலையம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் வல்லுனர்களுக்கு பெரும் சவாலானதாக கருதப்பட்ட இந்தப் பணியானது மிகப் பிரமாதமாக முடிந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் இதுதான்.
9 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விமான நிலையத்தை இன்று திறந்து வைத்தார்.
|
மலை உச்சியில்
இமயமலைத் தொடரில் இடம் பெற்றுள்ள சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்த இந்த விமான நிலையம் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே விமான நிலையங்கள் உள்ளன. சிக்கிமில் மட்டும்தான் விமான நிலையம் இல்லை. அந்தக் குறை இன்றோடு நீங்கியது.
1.75 கிலோமீட்டர் ரன்வே
பாக்யாங் விமான நிலையத்தில் 1.75 கிலோமீட்டர் தொலைவிலான ரன்வே அமைக்கப்பட்டுள்ளது. டாக்ஸிவே 116 மீட்டர் நீளம் கொண்டது.
|
டெல்லி, குவஹாத்தி, கொல்கத்தா
அக்டோபர் 4ம் தேதி முதல் இங்கு விமான போக்குவரத்து தொடங்கவுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 78 சீட்டுகள் கொண்ட விமானங்களை இயக்கவுள்ளது. முதல் கட்டமாக கொல்கத்தா, டெல்லி, குவஹாத்தி நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படும்.
605 கோடி செலவில்
201 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விமான நிலையம் 605 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொறியியல் ரீதியிலான சவால்களுக்கு மத்தியில் இது உருவாக்கப்பட்டுள்ளது. சரிவான பகுதி என்பதாலும், அதை சரி செய்து விமான நிலையத்தை உருவாக்க வேண்டியிருந்தது என்பதாலும் பெரும் சவாலாக இது அமைந்தது. ஒரு மலையின் மேல் இந்த விமான நிலையத்தை அமைத்துள்ளனர் என்பது இன்னொரு சிறப்பு.
சீன எல்லை
விமான நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இந்திய - சீன எல்லை உள்ளது. நாட்டின் 100வது இயங்கக் கூடிய விமான நிலையம் என்ற பெருமையை பாக்யாங் விமான நிலையம் பெறுகிறது.