ஒருபுறம் சீனா-மறுபுறம் மே.வங்கத்தின் குசும்பு-நடுவில் கூர்க்காலாந்து போராட்டம்- தவிக்கும் சிக்கிம்!
காங்டாங்: கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரும் போராட்டங்களால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிக்கிம் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ச்சியான போராட்டங்களால் மேற்கு வங்க அரசிடம் நஷ்ட ஈடு கோரி சிக்கிம் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது.
மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மலைப் பகுதிகளை 'கூர்க்காலாந்து' என தனி மாநிலமாக அறிவிக்க கோரி 30 ஆண்டுகாலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த போராட்டம் ஓய்ந்திருந்தது.
கடந்த மாதம் மேற்கு வங்கத்தில் வங்க மொழியே கட்டாயப் பாடம் என முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்தார். அவ்வளவுதான் டார்ஜிலிங்கில் போராட்டம் வெடித்தது.
போர்க்களம்
மீண்டும் தனி மாநிலம் கோரி கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியான போராட்டங்கள், முழு அடைப்பு என போர்க்களமாகிவிட்டது சிலிகுரி, டார்ஜிலிங் பகுதிகள். கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை சிக்கிம் மாநில அரசும் ஆதரிக்கிறது.
அத்தியாவசிய பொருட்கள் தடுப்பு
ஆனால் கூர்க்காலாந்து போராட்டக் குழுவினர் முழு அடைப்பு விடுத்துள்ளதால் சிலிகுரியில் இருந்து சிக்கிமுக்கு அத்தியாவசப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் தடுக்கப்பட்டு சூறையாடப்பட்டு வருகின்றன. நாள்தோறும் சிலிகுரியில் இருந்து 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் அத்தியாவசியப் பொருட்களுடன் சிக்கிம் செல்லும்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஆனால் கடந்த 20 நாட்களாக இந்த போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறி பழங்களை ஏற்றிக் கொண்டு இதுவரை 10 வாகனங்கள்தான் சிக்கிமுக்கு போயுள்ளன. இதனால் சிக்கிமில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது.
ஏடிஎம்கள் மூடல்
அதேபோல் வங்கிகளுக்கான பணம் எடுத்துச் செல்ல மேற்கு வங்க மாநில போலீசார் பாதுகாப்பு அளிக்க மறுக்கின்றனர். இதனால் சிக்கிம் ஏடிஎம் மையங்கள் பூட்டி கிடக்கின்றன. இது தொடர்பாக அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங், கூர்க்காலாந்து தனி மாநில போராட்டங்களால் ரூ60,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறியிருந்தார்.
தவிக்கும் சிக்கிம்
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்திடமும் சிக்கிம் முதல்வர் முறையிட்டுள்ளார். மேலும் மேற்கு வங்கத்திடம் இருந்து ரூ60,000 கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவும் சிக்கிம் அரசு முடிவு செய்துள்ளது.
பொறுப்பு வேண்டும்
சிக்கிம் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது.. அங்கு ராணுவத்தினர் மட்டுமல்ல.. அந்த மக்களும் ஊதியம் வாங்காத போர்வீரர்களாக தாய் மண்ணை காத்து நிற்கிறார்கள்.. அவர்களின் துயரைத் தீர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு மேற்கு வங்க அரசுக்கு நிச்சயம் உண்டு!