சர்ச்சைகளால் ம.பி. அரசு திடீர் முடிவு- என்கவுண்டரில் ஈடுபட்ட போலீசாருக்கு பரிசு தொகை நிறுத்தி வைப்பு
சிமி என்கவுண்டர் சம்பந்தமாக பெரும் சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து அதில் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை நிறுத்தி வைப்பதாக மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சிறையில் இருந்து தப்பிச் சென்ற சிமி இயக்கதினர் 8 பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீசாருக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை நிறுத்தி வைப்பதாக அந்த மாநில அரசு கூறியுள்ளது.
சிமி என்கவுண்டர் சம்பந்தமாக எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களை முன்னிட்டு நீதி விசாணைக்கு உத்தரவிட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில பாஜக அரசு குறிப்பிட்டுள்ளது.
கடந்த அக்டோபர்; 31-ம் தேதி சிமி என்கவுண்டர் சம்பவம் நடந்தது. அதில் 8 சிமி இயக்கத்தினர் கொல்லப்பட்டனர்.
அதில் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தலா ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்தார்.
இந்நிலையில் சிமி என்கவுண்டரில் பல்வேறு சந்தேக முடிச்சுகள் இருப்பதாக சமூக ஆர்வலர்களும் அரசியல் பிரமுகர்களும் கேள்வி எழுப்பினர்.
மேலும், போலீசாருக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், சிமி என்கவுண்டரில் ஈடுபட்ட போலீசாருக்கான பரிசுத் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.