போபால் அருகே சிமி தீவிரவாதிகள் 8 பேரை சுட்டு வீழ்த்திய 'என்கவுண்டர்' வீடியோ.. மீடியாவில் வெளியானது
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பாதுகாவலரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய 8 சிமி தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 சிமி தீவிரவாதிகள் பாதுகாவலரை கொலை செய்துவிட்டு இன்று அதிகாலை தப்பியோடியதாக கூறப்பட்டது.
தப்பியோடியவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் போபாலின் புறநகர் பகுதியில் உள்ள எய்ன்ட்கேதி கிராமத்தில் வைத்து நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் 8 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்த வீடியோவை 'நியூஸ்18 தமிழ்நாடு' சேனல் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது. அதில் மலை மேடு மாதிரியான ஒரு இடத்தில் குவியலாக 8 தீவிரவாதிகளும் படுத்திருக்கிறார்கள். அவர்கள் இறந்த நிலையில் காணப்படுவதை போல அசைவற்று உள்ளனர். அவர்களிடம் அதிகாரி ஒருவர் சோதனை போட்டபடி உள்ளார். அப்போது ஒரு போலீஸ்காரர் இறந்ததை போல கிடக்கும் ஒருவரை துப்பாக்கியால் மீண்டும் சுடுகிறார். அப்போது அந்த உடலில் கை துடித்து அடங்கியது.
மேலும், "அவர்களிடமிருந்து ஆயுதங்களை எடுங்கள்" என்று சக போலீஸ்காரர்கள் சத்தமாக ஹிந்தியில் கூறும் வார்த்தைகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதேபோலத்தான் ஒரு அதிகாரியும், கீழே கிடக்கும், தீவிரவாதியின் ஜீன்ஸ் பேண்ட்டில் அவரது இடுப்பு பகுதியிலிருந்து கத்தியொன்றை வெளியே எடுக்கிறார். ஆனால், அந்த கத்தியை அப்படி செருகி வைக்க முடியுமா என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது. அப்படி கத்தி வைக்கப்பட்டிருந்தால் அதை வைத்திருந்தவர் தொடையையே அது பதம் பார்த்திருக்கும். செயற்கையாக கத்தியை எடுப்பதை போல வீடியோ உள்ளதாக தெரிகிறது.
தீவிரவாதியில் ஒருவருக்கு உயிர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மீண்டும் ஒருமுறை அவரை சுட்ட காட்சி வீடியோவில் பதிவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.