சென்ட்ரல், பெங்களூர் குண்டுவெடிப்புகளுக்கு இடையே நெருங்கிய தொடர்பு – விசாரணைக்குழு தகவல்
பெங்களூர்: சென்னை சென்ட்ரல் இரட்டை குண்டுவெடிப்புக்கும் பெங்களூரில் இதற்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை குண்டுவெடிப்பு குறித்து தமிழக, கர்நாடகா போலீசார் இணைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணைக்காக 10 பேர் கொண்ட தமிழக போலீஸ் குழு பெங்களூரில் முகாமிட்டுள்ளது.
சென்னையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பெங்களூரில் 2010 இல் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு மற்றும் மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மூன்று சம்பவங்களிலும் ஒரே மாதிரியான பொருள் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. "மேலும், இந்த மூன்று சம்பவங்களிலும் வெடிகுண்டுகள் தயாரிப்பு முறைகளும் கூட ஒரே மாதிரியாக உள்ளன.மூன்றுமே குறைந்த வெடிக்கும் தன்மை கொண்டவை.மிக எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வகையைச் சேர்ந்தவை.உலோகப் பொருளானது, முக்கிய பாகத்திலிருந்து தனியாக கழட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது" என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அல்-உம்மா இயக்கத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் மல்லெஸ்வரம், பெங்களூர் குண்டுவெடிப்புகளில் கைதானது குறிப்பிடத்தக்கது.
2010 இல், ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற சின்னசாமி ஸ்டேடியம் இரட்டை குண்டுவெடிப்பில் 10 பேர் படுகாயமடைந்தனர். மூன்று வருடம் கழித்து, அதே நாளில் மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் படுகாயமடைந்தனர்.
"தற்போதைய விசாரணையின்படி ஒரே நபர்தான் இந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டுள்ளார்.மேலும், இந்த குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட பொருள் இன்னும் அவர்களிடம் இருக்க வாய்ப்புள்ளது" என்று விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.