ஜிஎஸ்டி... மத்திய அரசின் சாதனைகளின் மைல்கல்... வருவாய்த் துறை செயலர் பெருமிதம்
ஒரே நாடு ஒரே வரி என்று அதிரடி காட்டிவரும் மத்திய பாஜக அரசின் சாதனைகளில் ஜிஎஸ்டி ஒரு முக்கிய மைல்கல் என்று மத்திய அரசின் வருவாய்த்துறை செயலர் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால், அது மிக முக்கிய மைல்கல் சாதனையாக இருக்கும் என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, துர்தர்ஷன் தொலைக்காட்சியில் பேட்டியளித்த வருவாய்த் துறை செயலர் ஹஷ்முக் அதியா இந்தத் தகவலை கூறியுள்ளார் .
மேலும், அவர் பேசுகையில், மற்ற உலக நாடுகளைப் போல, இந்தியாவிலும் ஒற்றை சரக்கு, சேவை வரி விதிக்கப்படுவது அவசியம். ஒரே ஒரு அரசு இயந்திரம்தான் இதனை அமல்படுத்த வேண்டும். மாநில அரசுகளைவிட, மைய அரசின் கட்டுப்பாட்டில் ஜிஎஸ்டி இருப்பது நல்லது.
பல்வேறு வரிகளை விதிப்பதைவிட, ஏதேனும் ஒன்று அல்லது 2 வரிகள் மட்டுமே விதிக்கப்படுவது அனைவருக்கும் நல்லது,'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜிஎஸ்டி குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் வருவாய்த்துறை செயலர் சாதனை என்று கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி வரும் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட இருக்கிறது. இதில் பால், உணவு தானியங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.