காட்டுத்தீயாக பரவிய குழந்தை கடத்தல் மெசேஜ்.. இதுவரை 29 பேர் அடித்து கொலை.. இனியாவது விழிக்குமா அரசு?
காட்டுத் தீயாக பரவி வரும் குழந்தை கடத்தல் குறித்த வாட்ஸ் ஆப் வதந்தியால் இந்தியாவில் 29 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
Recommended Video
டெல்லி: குழந்தை கடத்தல் குறித்த வாட்ஸ் ஆப் வதந்தி காட்டுத் தீயாக பரவி வருவதால் இந்தியாவில் 29 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இனியாவது அரசு விழித்துக் கொள்ளாமல் இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தமிழகம் முதல் திரிபுரா வரை இன்றைய ஹாட் டாபிக் குழந்தை கடத்தல். அதுவும் வாட்ஸ் ஆப்களில் வரும் வதந்திகளால் அப்பாவி மக்கள் அடித்து கொல்லப்படுகின்றனர். இந்த வாட்ஸ் ஆப் வதந்தி காட்டுத் தீயாக பரவுகிறது.
இப்படியே போனால் இந்த எண்ணிக்கை இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் 100-ஐ தொட்டு விடும். வாட்ஸ் ஆப் மெசேஜ்களால் சில நேரங்களில் நன்மை ஏற்பட்டாலும் சில நேரங்களில் இதுபோன்ற தீமைகள் வரத்தான் செய்கிறது. குழந்தை கடத்தல்காரர்கள் ஏராளமானோர் நம் மாநிலத்தில் நுழைந்துள்ளனர்.
வீடியோ
"நம்மையும் குழந்தைகளையும் வெளியாட்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு உணர்த்துபவையாக உள்ளன. இவையெல்லாம் உறுப்பு திருடும் கும்பலின் கைவரிசையாக உள்ளது" என்ற தகவல்களுடன் குழந்தையை இரு சக்கர வாகனத்தில் கடத்துவது போன்ற வீடியோவும் வருகிறது.
தவறாக நினைத்து
அந்த வீடியோ பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் எடுக்கப்பட்டது. குழந்தை கடத்தலுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அந்த வீடியோவில் சில மாற்றங்களை செய்து இந்தியா முழுவதும் பரப்புகின்றனர். இதனால் குழந்தை கடத்தும் எண்ணம் கூட இல்லாத மக்கள் தவறாக நினைக்கப்பட்டு அடித்தே கொல்லப்படுகின்றனர்.
சவால்
இதுவரை இந்தியாவில் 29 கொலைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனாலும் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிரிழப்பை தடுக்க போலீஸாரும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினாலும் இந்த பணி என்பது மிகப் பெரும் சவால் நிறைந்ததாகும்.
அதிகாரி இல்லை
இந்த விவகாரத்தில் இதுவரை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாநில அரசுகளுக்கு எந்த வித அறிவுறுத்தலையும் உள்துறை அமைச்சகம் கூறவில்லை. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கிற்கான மெசன்ஜர் ஆகியவற்றில் இந்தியாவுக்கென செய்தித் தொடர்பாளர் இல்லை.
விழித்து கொள்ளுமா அரசு
இந்தியாவில் உள்ள வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள் இதுபோன்ற வதந்தியை நம்ப வேண்டாம் என பல்வேறு மொழிகளில் மெசேஜ் அனுப்புவது அவர்களுக்கு கடினமான வேலையாக எப்படி இருக்கும். இதுவரை தாக்கப்பட்டவர்கள் விவரங்கள் மாதவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை பார்த்துவிட்டு இனியாவது மத்திய, மாநில அரசுகள் விழித்து கொள்ள வேண்டும்.
2017 மே - ஜார்க்கண்டில் 7 பேர் அடித்துக் கொலை
10 மே 2018- தமிழகத்தில் இருவர் அடித்துக் கொலை
23 மே 2018- பெங்களூரில் ஒருவர் அடித்து கொலை
மே 2018- ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் வெவ்வேறு சம்பவங்களில் 6 பேர் கொலை
8 ஜூன்- மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத் மற்றும் அஸ்ஸாமில் தலா 2 பேர் அடித்துக் கொலை
13 ஜூன்- மேற்கு வங்கத்தில் மால்டாவில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்
23 ஜூன்- மேற்கு வங்கத்தில் கிழக்கு மிட்னாபூரில் ஒருவர் கொலை
26 ஜூன்- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 45 வயது பிச்சை எடுக்கும் பெண் கொலை
28 ஜூன் - திரிபுராவில் ஒரே நாளில் வதந்திகளை நம்பாதீர் என விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள அரசால் நியமிக்கப்பட்டவர் உள்பட 3 பேர் அடித்துக் கொலை
ஜூலை 1- மகாராஷ்டிரத்தின் தூள் மாவட்டத்தில் 5 பேர் அடித்துக் கொலை