மணமகனுக்கு பதிலாக மணப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் சகோதரி.. இது குஜராத் ஸ்டைல் திருமணம்
காந்திநகர்: குஜராத் முறைப்படி நடத்தப்படும் திருமணங்களில் சடங்குகளில் மணமகனுக்கு பதிலாக அவரது திருமணமாகாத சகோதரியை திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் பின்பற்றப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் சோட்டா உதேப்பூரில் சுர்கேடா, சனடா மற்றும் ஆம்பல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பெரும்பாலும் பழங்குடியினரே வசித்து வருகின்றனர்.
மணமகன் ஷெர்வானி உடையணிந்து கொண்டு தலைப்பாகை அணிந்து கையில் வாளுடன் இருக்கிறார். ஆனால் அவர் திருமண சடங்குகளில் கலந்து கொள்ள மாட்டார்.
அவர் அவரது வீட்டில் தனது தாயுடன் இருப்பார். அவருக்கு பதிலாக அவரது திருமணமாகாத சகோதரியோ இல்லை திருமணமாகாத வேறு ஒரு பெண்ணோ சடங்குகளில் கலந்து கொள்வர். மணமகளின் வீட்டுக்கே செல்லும் அந்த சகோதரி அவரை திருமணம் செய்து அழைத்து வருவார்.
இது போன்ற பழக்க வழக்கம் காலம்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு வேளை இது போன்ற சடங்குகளை கடைபிடிக்காவிட்டால் துன்பங்கள் வந்து சேரும் என்பது அப்பகுதியினரின் நம்பிக்கை. இந்த சடங்குகளை கடைப்பிடிக்காதவர்களின் திருமண வாழ்க்கை முறிவதற்கும், துன்பங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் நிறைய உண்டு என்கின்றனர் ஊர் பெரியவர்கள்.