கேரள கன்னியாஸ்திரி வல்சா ஜோன் கொலை வழக்கு - 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது ராஞ்சி கோர்ட்!
ராஞ்சி: கேரள கன்னியாஸ்திரி ஒருவர் ஜார்க்கண்டில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது ராஞ்சி நீதிமன்றம்.
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த கக்கநாடு, வாழக்கால் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி வல்சாஜோன். இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் வெளி மாநிலங்களில் உள்ள கிறிஸ்தவ பள்ளிகளில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அதன் பிறகு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஆதிவாசி மக்கள் வசிக்கும் மலை பிரதேசத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி போதித்து வந்தார்.
இதற்காக அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அவருடன் 45 க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி கன்னியாஸ்திரி வல்சாஜோன் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது ஒரு கும்பல் வீடு புகுந்து வல்சாஜோனை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். படுகாயம் அடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த கும்பல் கன்னியாஸ்திரி வல்சாஜோனை கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். இக்கொலையில் ராஞ்சி போலீசார் விசாரணை நடத்தி 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு ராஞ்சி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.