மம்தா பானர்ஜி வீட்டில் ‘பதுங்கியது’ யார்? கிடைக்காத துப்பு -விசாரிக்க சிறப்பு புலானாய்வு படை அமைப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வீட்டின் சுவர் ஏறிக்குதித்து இரவு முழுவதும் பதுங்கிய மர்ம நபர் குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டு இருக்கிறது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வீடு தலைநகர் கொல்கத்தாவில் உள்ள கலிகாட் பகுதியில் அமைந்து இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அவரது வீட்டின் சுவர் ஏறிக்குதித்த மர்ம நபர் இரவு முழுவதும் அங்கேயே பதுங்கி இருந்திருக்கிறார்.
மம்தா பானர்ஜிக்கு அச்சுறுத்தல்! இரவு முழுக்க.. யார் அந்த மர்ம நபர்? பரபரக்கும் மேற்கு வங்க போலீஸ்
மர்ம நபர் கைது
ஞாயின்று அன்று காலை மர்ம நபரை கண்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பாதுகாவலர் உடனடியாக கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறார். தகவலறிந்த கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் வினீத் கோயல் மற்றும் மூத்த காவல் அதிகாரிகள் முதலமைச்சர் இல்லம் நோக்கி விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
Z பிரிவு பாதுகாப்பு
Z பிரிவு பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டிற்கு அருகில் செல்வதே அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நிலைமை இவ்வாறு இருக்க ஒருவர் சுவர் ஏறிக்குதித்து முதலமைச்சர் வீட்டிலேயே இரவு முழுவதும் தங்கி இருந்திருப்பது பாதுகாப்பு தோல்வியாக பார்க்கப்படுகிறது. பாதுகாப்புகளை தாண்டி மர்ம நபர் எப்படி உள்ளே புகுந்தார் என அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல கோணங்களில் விசாரணை
மம்தா பானர்ஜியின் வீட்டில் ஏறிக்குதித்த நபர் யார்? அவர் முதலமைச்சரின் வீட்டில் பதுங்கியதற்கான காரணம் என்ன? மனநிலை பாதிக்கப்பட்ட நபரா? திருடனா? அல்லது வேறு சதித்திட்டங்களுடன் உள்ளே புகுந்தாரா? என பல்வேறு கோணங்களில் மேற்கு வங்க காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாத சம்பவம்
கொல்கத்தாவில் கடந்த மாதம் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீட்டுக்கு அருகாமையில் இரட்டை கொலை சம்பவம் அரங்கேறியது. இந்த நிலையில் மம்தா பானர்ஜி வீட்டில் இரவு முழுவதும் மர்ம நபர் பதுங்கியது தொடர்பாக கடந்த 2 நாட்களாக போலீசார் விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து 8 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு படை விசாரணைக்காக அமைக்கப்பட்டு இருக்கிறது.