3 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் பரபரப்பாகும் "கருப்பு பண" வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழு!!
டெல்லி: வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்து உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு கடந்த 3 ஆண்டுகாலமாக மெதுமெதுவாக விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது பரபரப்பு கட்டத்துக்குள் நுழைந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று கருப்புப் பண முதலைகள் 627 பேரின் பட்டியலைத் தாக்கல் செய்தது. இந்தப் பட்டியலை உடனே சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு அனுப்பி வைப்பதாகவும் அக்குழு அதன் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
2011-ல் அமைக்கப்பட்ட குழு
உச்சநீதிமன்றம் அமைத்த இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவானது கடந்த 2011ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். முன்னாள் சட்ட அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி 2009ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார்.
ராஜ்மெத்மலானி வழக்கு
சுவிட்சர்லாந்து உட்பட பல வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ராம்ஜெத்மலானி வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2011ஆம் ஆண்டு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
நீதிபதி ஜீவன் ரெட்டி
2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்ஸன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்தான் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. ஓய்வுபெற்ற நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது.
மொத்தம் 13 பேர் குழு
இந்த குழுவின் துணைத்தலைவராக நீதிபதி எம்.பி.ஷாவும் நியமிக்கப்பட்டார். இந்த குழுவில் பல்வேறு துறை செயலாளர்களை உள்ளடக்கி மேலும் 11 பேரும் இடம்பெறுவர். இந்த சிறப்புக் குழு தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை 3 வாரத்துக்குள் வெளியிடவும் அப்போதைய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
விலகிய ஜீவன்ரெட்டி
பின்னர் ஜீவன் ரெட்டி தனிப்பட்ட காரணங்களுக்காக தம்மால் இந்த விசாரணைக் குழுவில் இடம்பெற இயலாது என்று கூறி விலகிக் கொண்டார். இந்நிலையில் ஜெர்மனியிடம் இருந்து மத்திய அரசு பெற்ற கருப்புப் பணத்தைப் பதுக்கியோர் பட்டியலை தாக்கல் செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை ராம்ஜெத்மலானி நாடினார்.
ஜெர்மன் வங்கியில் 18 பேர்
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினால் ஜெர்மன் வங்கி ஒன்றில் பணத்தை பதுக்கி வைத்திருந்த 18 இந்தியர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலையும், அதுதொடர்பான விவரங்களையும் முத்திரையிட்ட கவரில் வைத்து மத்திய அரசு கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இது சிறப்பு விசாரணைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் அப்போது, சிறப்பு விசாரணைக் குழுவின் துணைத் தலைவராக உள்ள நீதிபதி எம்.பி.ஷாவை தலைவராக நியமித்து ஆணை பிறப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். ஆனால் மத்திய அரசு சிறப்புக் குழுவுக்கான ஆணையைப் பிறப்பிக்கவில்லை.
எம்.பி. ஷா தலைமையில்...
பின்னர் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது புதிய மத்திய அரசு ஒரு வார கால அவகாசம் கோரியது. இதனைத் தொடர்ந்து மே 27-ந் தேதி கூடிய பிரதமர் மோடி தலைமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு ஆணை பிறக்கப்பட்டது.
ஆகஸ்ட்டில் அறிக்கை
இந்தக் குழுவானது கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் தமது முதலாவது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன் அடுத்த 2 மாதங்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த வழிகாட்டுதல்களின்படி விசாரணையை மேலும் தொடர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
பரபரப்பு கட்டம்..
இந்த நிலையில்தான் இன்று 627 பேர் கொண்ட பட்டியலை பெற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு அதை அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் அனைவரது பார்வையும் சிறப்புப் புலனாய்வுக் குழு பக்கமே இருக்கும்,