பனிச்சரிவில் புதைந்த ராணுவ முகாம்... 6 வீரர்கள் பலியான பரிதாபம்
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய ராணுவ முகாமில் இருந்த விரர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிச்சரிவு நிலவி வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குரேஸ் பகுதியில் இன்று காலை பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பனிச்சிகரத்தின் அடிவாரத்தில் செயல்பட்டு வந்த ராணுவ முகாம் பனியால் மூடப்பட்டது.
இந்த விபத்தில் முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பனிச்சரிவவில் சிக்கி 6 வீரர்கள் பலியாகியுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பனிச்சரிவில் எத்தனை வீரர்கள் சிக்கியுள்ளனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. தொடர்ந்து பனி கொட்டி வருவதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.