காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதல்.. ஒரே நாளில் 6 தீவிரவாதிகள் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 6 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் தோப்வான் காட்டு பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் இன்று அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில போலீசாரும் தேடுதல் வேட்டையில் இணைந்தனர். அப்போது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்த தொடங்கினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும்
தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ராணுவம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் குப்வரா மாவட்டத்தில் மற்றொரு இடத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த சண்டையில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இன்று ஒரே நாளில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.