நொய்டாவில் நக்சலைட் தளபதி உள்பட 6 பேர் கைது: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், போலீசார் நேற்று இரவு நடத்திய அதிரடி சோதனையில் நக்சலைட் முக்கிய தளபதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜார்க்கண்ட் மாநிலம் லேத்கர் பகுதியைச் சேர்ந்த நக்சலைட் தளபதி பிரதீப் சிங் கர்வார் உள்பட 6 முக்கிய நக்சலைட்டுகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்மாநில போலீசார் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நக்சலைட் தளபதி பிரதீப் சிங் கர்வாரை தலைக்கு 5 லட்சம் வெகுமதி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக உத்தரபிரதேச மாநில போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.