6 ஜனதா கட்சிகள் இணைந்தன! புதிய கட்சியாக 'சமாஜ்வாதி ஜனதா' உதயம்! முலாயம்சிங் தலைவரானார்!!
டெல்லி: 6 'ஜனதா' கட்சிகள் இணைந்து புதிய கட்சியாக உருவாகியுள்ளது. இந்த புதிய கட்சியின் தலைவராக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய கட்சிக்கு 'சமாஜ்வாதி ஜனதா' என பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. குறிப்பாக ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் வலுவாக இருக்கும் பீகாரிலும் சமாஜ்வாதி கட்சி ஆளும் உத்தரப்பிரதேசத்திலும் பெரும்பான்மை தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து பரம எதிரிகளாக இருந்த ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவும் நண்பர்களாக கை கோர்த்தனர்.. இந்த அணி சேர்க்கை மெல்ல மெல்ல விரிவடைந்தது.
6 கட்சிகள் இணைப்பு
ஒருகாலத்தில் ஜனதா கட்சியில் இருந்து இன்று பிரிந்து தனித்தனியாக இருக்கும் 6 கட்சிகளும் ஒன்றிணைவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், மதச்சார்ப்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தள், சமாஜ்வாதி ஜனதா கட்சி ஆகிய 6 கட்சிகளின் தலைவர்களும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்த 6 கட்சிகளும் இணைந்து புதிய கட்சியை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை ஜனதா கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர்.
முலாயம் தலைவர்
இந்த சந்திப்பில் சரத் யாதவ், லாலு பிரசாத் யாதவ், முலாயம்சிங் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 6 கட்சிகளும் இணைந்து ஒரே கட்சியாக செயல்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்சியின் தலைவராக முலாயம்சிங் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இப் புதிய கட்சியின் முதன்மை இலக்கே பாரதிய ஜனதாவை வீழ்த்துவதுதான்.. கட்சியின் பெயர், கொடி, சின்னம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என இந்த தலைவர்கள் கூட்டாக தெரிவித்தனர்.
சமாஜ்வாதி ஜனதா
இதனிடையே புதிய கட்சிக்கு சமாஜ்வாதி ஜனதா என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சமாஜ்வாதி கட்சியின் சின்னமாக சைக்கிள் சின்னமே புதிய கட்சியின் சின்னமாகவும் இருக்கும் என்றும் தெரிகிறது.
ஜனதா பின்னணி..
1975ஆம் ஆண்டு நாட்டில் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்த பின்னர் 77ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சித் தலைவர்களாக இருந்த ஜெய்பிரகாஷ் நாரயணன், மொரார்ஜி தேசாய் உள்ளிட்டோர் இணைந்து ஜனதா கட்சியை தொடங்கினர். இதில் ஜனதா மோர்ச்சா, சரண்சிங்கின் பாரதிய லோக் தள், சுதந்திரா கட்சி, சோசலிஸ்ட் கட்சி, பாரதிய ஜன சங் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இந்த கட்சியின் தலைவராக மொரார்ஜி தேசாய், பொதுச்செயலராக ராமகிருஷ்ண ஹெக்டே, ஜன சங்கத் தலைவரான அத்வானி செய்தி தொடர்பாளராக இருந்தனர். அப்போது நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் உட்கட்சி மோதல்களால் ஜனதா கட்சி அரசு நீண்டகாலம் நிலைக்கவில்லை.
இதன் பின்னர் ஜனதா கட்சி சுக்கு நூறாக உடைந்தது.. பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம், அதில் பல உட்பிரிவுகள் என வெவ்வேறு கட்சிகளாகின. தற்போது ஜனதா தளத்தில் இருந்து பிரிந்த 6 கட்சிகளும் மீண்டும் ஒரே கட்சியாகி இருக்கின்றன.
பீகார் தேர்தல்..
6 கட்சிகளும் தற்போது இணைந்திருப்பது என்பது இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலை மனதில் வைத்துதான்.. பீகாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவு அளிக்கிறது.
அதே நேரத்தில் பீகாரில் எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவது என பாரதிய ஜனதா கட்சி வியூகம் வகுத்து செயல்படுகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில்தான் அத்தனை ஜனதா கட்சிகளும் தற்போது வரிந்து கட்டிக் கொண்டு ஒரே கட்சியாக திரண்டுள்ளன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.