சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் மோதல்: 6 போலீசார் பலி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த மோதலில் 6 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் வனப்பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. இந்தப் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், அம்மாநில போலீசாருடன் இணைந்து நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சத்தீஷ்காரில் தேடுதல் வேட்டையின் போது இன்று இருகுழுக்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது இந்த சம்பவத்தில் 6 போலீசார் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேடுதல் வேட்டை வாகனத்தில் மொத்தம் 10 காவலர்கள் இருந்துள்ளனர். அப்போது இருவரும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்தில் 5 காவலர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காயமடைந்த ஒரு காவலரும் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சத்தீஷ்கார் மாநிலம் சுக்மாவில் நக்சலைட்டு தீவிரவாதிகள் நடத்திய கண்ணி வெடிகுண்டு தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர், 12 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.