கர்நாடக சிறையில் அழகியின் குத்தாட்டம்... குடியரசு தினவிழாவில் ‘குஷி’... 3 போலீசார் சஸ்பெண்ட்
பெங்களூரு: கர்நாடக சிறையொன்றில் குடியரசு தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் மாடல் அழகியின் குத்தாட்ட நடனத்திற்கு ஏற்பாடு செய்திருந்த 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் விஜய்பூர் பகுதியில் உள்ள சிறை ஒன்றில், குடியரசு தினமான நேற்று கைதிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறை உயரதிகாரிகள், கைதிகள் என பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நடன நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது விழா மேடையில் பெண் ஒருவர் குத்தாட்டம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் நடனம் ஆடும் பெண் மீது சுற்றியிருப்பவர்கள் ரூபாய் நோட்டுக்களை தூக்கி வீசுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
அதனைத் தொடர்ந்து இந்த நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக சிறை காவலர்களான அம்பேத்கர், சம்பத் மற்றும் குண்டாலி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.