அசதியில் ‘ஆ’வென தூங்கிய இளைஞர்... வாய்க்குள் புகுந்த பாம்பின் தலையை கடித்து விழுங்கினார்!
இந்தூர்: வேலை களைப்பில் அசந்து உறங்கிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக வாய்க்குள் நுழைந்த பாம்பின் தலையை இளைஞர் கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் வினோத் ரகுவான்ஷி. நேற்று பணி முடிந்து திரும்பிய வினோத் வழக்கம்போல் அசதியில், ஆவென வாயைத் திறந்தபடி குறட்டை விட்டுத் தூங்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று அவரின் வாயினுள் நுழைந்துள்ளது. ஆனால், நல்ல தூக்கத்தில் இருந்த வினோத், அந்தப் பாம்பைக் கடித்து இரண்டு துண்டுகளாக்கி விட்டார். வால் பகுதி கீழே விழுந்துவிட, வாயில் கிடைத்த தலைப்பகுதியை மென்று விழுங்கி விட்டார்.
அப்போது எதேச்சையாக வினோத் அறைக்கு வந்த அவரின் தாயார் மகன் வாயில் இரத்தம் வழிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கூடவே, வினோத்தின் அருகில் பாம்பின் தலையில்லாத உடல் கிடந்ததால் பீதி அடைந்து, உடனடியாக அவரை எழுப்பியுள்ளார்.
அப்போது தான் வினோத் பாம்பின் தலையை கடித்து விழுங்கியது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார் வினோத்.
அங்கு வினோத்தின் கதையைக் கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். பின்னர் அவருக்கு அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று சில மாதங்களுக்கு முன்னதாக ஜார்கண்ட் மாநிலத்தில் காட்டுவாசி ஒருவர், கட்டுவிரியனை கடித்து கொன்ற, அடுத்த 12 மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன்னதாக நேபாளில் நடந்த இதுபோன்ற சம்பவத்தில் பாம்பை கடித்தவர் உயிரிழக்கவில்லை. தற்போது அதிர்ஷ்டவசமாக வினோத்தும் உயிர் தப்பியுள்ளார்.