சந்திரபாபு நாயுடு சென்ற வாகனம் மீது காலணி வீச்சு... வழியை மறித்து போராட்டம்
Recommended Video
அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சென்ற வாகனம் மீது காலணி வீசப்பட்ட நிகழ்வு ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது ஆட்சியில் தொடங்கப்பட்ட தலைநகர் அமராவதி கட்டுமானப் பணிகளை பார்வையிட சென்ற அவரை, வெங்கடபாலம் என்ற இடத்தில் மறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஆனால் சந்திரபாபு நாயுடு தன்னுடன் பேருந்தில் பயணித்த நிர்வாகிகளை அமைதிகாக்க கூறியதால் மோதல் தவிர்க்கப்பட்டது.
அமராவதி
ஆந்திர தலைநகர் அமராவதியில் தனது ஆட்சியில் தொடங்கப்பட்ட கட்டமைப்பு கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதற்காக தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் படை சூழ சந்திரபாபு நாயுடு இன்று அங்கு சென்றார். இதற்காக பேருந்தில் அவர் சென்ற போது, வெங்கடபாலம் என்ற இடத்தில் சந்திரபாபு நாயுடு வாகனம் மறிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது.
மோதல் போக்கு
சந்திரபாபு நாயுடு அமர்ந்திருந்த வாகனத்தின் கண்ணாடியில் திடீரென ஒருவர் காலணியை கழற்றி வீசிய சம்பவம் அங்கு பெரும் மோதலுக்கு வழி வகுத்தது. தெலுங்கு தேசம் கட்சியினர் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டபோது அவர்களை தடுத்து அமைதி காக்குமாறு கூறினார் சந்திரபாபு நாயுடு. பிறகு நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி சந்திரபாபு நாயுடு வாகனத்தை அனுப்பி வைத்தனர்.
தெலுங்கு தேசம் மறுப்பு
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடுடைய விவசாயிகள் இந்த போராட்டத்தை நடத்தியதாக கூறப்பட்டாலும், தெலுங்கு தேசம் கட்சியினர் அதனை மறுத்துள்ளனர். இது முழுக்க முழுக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் என்றும், விவசாயிகள் பெயரை பயன்படுத்தி அந்தக் கட்சியினர் தப்பிக்கப் பார்க்கின்றனர் எனவும் சாடியுள்ளனர்.
|
வெட்கக் கேடு
இதனிடையே தனது தந்தை ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அமராவதி கட்டுமானப்பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இது வெட்கக்கேடான செயல்பாடு எனவும் முதலமைச்சர் ஜெகனை கடுமையாக விமர்சித்துள்ளார் சந்திரபாபு நாயுடு மகன் நர லேகேஷ்.