எப்.ஐ.ஆர். போட மறுப்பு... காவல் நிலையத்தை சூறையாடி போலீசாரை பந்தாடிய குடிசைவாசிகள்!
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் எப்.ஐ.ஆர் போட மறுத்த போலீசாரை, குடிசை வாழ் மக்கள் ஒன்று சேர்ந்து சரமாரியாக அடித்து, சாக்கடையில் போட்டு புரட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் லக்ஷ்மிசாகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதி ஹால்டிபடா குடிசைப் பகுதி. இப்பகுதியில் வசித்து வரும் ஏற்கனவே மணமான சந்தோஷ் ஜெனா என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து கர்ப்பமாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப் பட்ட பெண்ணின் குடும்பத்தார் சந்தோஷ் மீது லக்ஷ்மிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். ஆனால், புகாரை எடுத்துக் கொள்ள அங்கிருந்த போலீசார் மறுத்ததாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை சூறையாடினர். பின்னர், இன்ஸ்பெக்டர் ராஜட் ராய் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அசோக் ஹன்ஸ்டா உட்பட அங்கிருந்த போலீசார் மீது அவர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசாரை சாக்கடையில் தள்ளி அடித்துள்ளனர்.
இதற்கிடையே, போலீசாரின் மீது குடிசைவாசிகள் தாக்குதல் நடத்தியதற்கு வேறு காரணமும் கூறப்படுகிறது. அதாவது சந்தோஷ் தனது மனைவியை உயிரோடு எரித்துக் கொல்ல முயற்சித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரைக் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீது அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. எனவே, தாக்குதல் குறித்த தெளிவான தகவல்கள் தெரியவில்லை.
இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், போலீசாரைத் தாக்கியதாக பெண் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். மேலும் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.